Saturday, November 15, 2008

சிறுநீரக பாதிப்பைத் தவிர்க்க...

இந்தியாவில் சுமார் ஒரு லட்சம் பேர் சிறுநீரக பாதிப்பால் அவதிப்படுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

சிறுநீரக நோய்க்கு உயர் இரத்த அழுத்தமே மிக முக்கியக் காரணமாக அமைகிறது. சிறுநீரக பாதிப்புக்கு ஆளாகும் நோயாளிகளில் 27 விழுக்காட்டினர் உயர் இரத்த அழுத்தத்தினாலேயே பாதிக்கப்பட்டிருப்பது அந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் சிறுநீரகங்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. அந்த வகையில் எந்தவொரு சிறுநீரகம் தொடர்பான பாதிப்பானாலும், அது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். உயர் இரத்த அழுத்தமானது இரத்த நாளங்களை பாதிக்கச் செய்து, அவற்றை குறுகியதாக்குவதுடன், நாளங்களின் வளைந்து கொடுக்கும் தன்மையை குறைத்து விடும்.

உயர் இரத்த அழுத்தத்தால், சிறுநீரகங்களில் உள்ள இரத்த நாளங்களும் பாதிக்கப்படும். இதனால் இரத்தத்தில் உள்ள அசுத்த மற்றும் துர்கிருமிகளை அகற்றும் பணிகளை மேற்கொள்ளும் சிறுநீரகங்களின் செயல்பாட்டில் பாதிப்பு உருவாகும். முழு அளவில் இரத்தத்தை பரிசுத்தப்படுத்த முடியாத நிலை ஏற்படும். இதனால் உடலில் பல்வேறு நோய்கள் உட்பட பல பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

சிறுநீரக பாதிப்பால் இதய நோய், எலும்பு நோய் உள்ளிட்டவை ஏற்படும் வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன.

பெரும்பாலும் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டிருப்பது, மிகவும் தாமதமாகவே கண்டறியப் படுகிறது. உடலின் மற்ற உறுப்புகள் பாதிப்புக்குள்ளான பிறகே சிறுநீரகப் பாதிப்பு வெளிப்படையாகத் தெரிய வருகிறது.

இதற்குக் காரணம் சிறுநீரகங்கள் செயல்பாடு பாதியளவுக்கு பாதிக்கப்பட்டிருந்தாலும் கூட, பெரும்பாலானோருக்கு உடலில் எந்த அறிகுறிகளும் தெரிவதில்லை. சிறுநீரகங்கள் பாதிப்புக்குள்ளானோருக்கு டயாலிசிஸ் எனப்படும் இரத்த சுத்திகரிப்பு மட்டுமே தீர்வாக அமையும்.

சிறுநீரக பாதிப்புகளை தடுப்பது எப்படி?

மருத்துவப் பரிசோதனைகள் மூலம் சிறுநீரக நோய்களை உரிய நேரத்தில் கண்டறிந்தால், நோய் பாதிப்பில் இருந்து மீள முடியும். இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை மூலம் சிறுநீரகப் பாதிப்புகளை அறியலாம்.
சிறுநீரில் எந்தவித புரோட்டீன் இழப்பும் இருத்தல் கூடாது. அப்படி இருப்பது கண்டறியப்பட்டால், உடனடியாக சிறுநீரக நோய்க்கான மருத்துவர்களை அணுகலாம். சிறுநீரில் அல்புமின் போன்ற புரோட்டீன் சிறிய அளவில் வெளியேறினாலும் கூட சிறுநீரகப் பாதிப்பிற்கான அறிகுறியாகும்.

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். இதன்மூலம் சிறுநீரக பாதிப்பில் இருந்து விடுபட முடியும். உங்களின் இரத்த அழுத்தத்தை அவ்வப்போது சோதித்துப் பார்த்தல் அவசியம்.

அன்றாடம் உடற்பயிற்சி செய்தல், காய்கறிகள், பழங்கள் போன்ற நார்ச்சத்து அதிகம் கொண்ட உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்வதால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருப்பதுடன் சிறுநீரகப் பாதிப்பில் இருந்தும் தப்பலாம்.

குறிப்பிட்ட இடைவெளியில் இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை செய்வதன் மூலம் ஏதேனும் பாதிப்புகள் இருப்பின் அது விரைவில் கண்டறியப்பட்டு விடும்.

நன்றி-Webdunia

No comments: