Saturday, November 15, 2008
சிறுநீரக பாதிப்பைத் தவிர்க்க...
சிறுநீரக நோய்க்கு உயர் இரத்த அழுத்தமே மிக முக்கியக் காரணமாக அமைகிறது. சிறுநீரக பாதிப்புக்கு ஆளாகும் நோயாளிகளில் 27 விழுக்காட்டினர் உயர் இரத்த அழுத்தத்தினாலேயே பாதிக்கப்பட்டிருப்பது அந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் சிறுநீரகங்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. அந்த வகையில் எந்தவொரு சிறுநீரகம் தொடர்பான பாதிப்பானாலும், அது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். உயர் இரத்த அழுத்தமானது இரத்த நாளங்களை பாதிக்கச் செய்து, அவற்றை குறுகியதாக்குவதுடன், நாளங்களின் வளைந்து கொடுக்கும் தன்மையை குறைத்து விடும்.
உயர் இரத்த அழுத்தத்தால், சிறுநீரகங்களில் உள்ள இரத்த நாளங்களும் பாதிக்கப்படும். இதனால் இரத்தத்தில் உள்ள அசுத்த மற்றும் துர்கிருமிகளை அகற்றும் பணிகளை மேற்கொள்ளும் சிறுநீரகங்களின் செயல்பாட்டில் பாதிப்பு உருவாகும். முழு அளவில் இரத்தத்தை பரிசுத்தப்படுத்த முடியாத நிலை ஏற்படும். இதனால் உடலில் பல்வேறு நோய்கள் உட்பட பல பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
சிறுநீரக பாதிப்பால் இதய நோய், எலும்பு நோய் உள்ளிட்டவை ஏற்படும் வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன.
பெரும்பாலும் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டிருப்பது, மிகவும் தாமதமாகவே கண்டறியப் படுகிறது. உடலின் மற்ற உறுப்புகள் பாதிப்புக்குள்ளான பிறகே சிறுநீரகப் பாதிப்பு வெளிப்படையாகத் தெரிய வருகிறது.
இதற்குக் காரணம் சிறுநீரகங்கள் செயல்பாடு பாதியளவுக்கு பாதிக்கப்பட்டிருந்தாலும் கூட, பெரும்பாலானோருக்கு உடலில் எந்த அறிகுறிகளும் தெரிவதில்லை. சிறுநீரகங்கள் பாதிப்புக்குள்ளானோருக்கு டயாலிசிஸ் எனப்படும் இரத்த சுத்திகரிப்பு மட்டுமே தீர்வாக அமையும்.
சிறுநீரக பாதிப்புகளை தடுப்பது எப்படி?
மருத்துவப் பரிசோதனைகள் மூலம் சிறுநீரக நோய்களை உரிய நேரத்தில் கண்டறிந்தால், நோய் பாதிப்பில் இருந்து மீள முடியும். இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை மூலம் சிறுநீரகப் பாதிப்புகளை அறியலாம்.
சிறுநீரில் எந்தவித புரோட்டீன் இழப்பும் இருத்தல் கூடாது. அப்படி இருப்பது கண்டறியப்பட்டால், உடனடியாக சிறுநீரக நோய்க்கான மருத்துவர்களை அணுகலாம். சிறுநீரில் அல்புமின் போன்ற புரோட்டீன் சிறிய அளவில் வெளியேறினாலும் கூட சிறுநீரகப் பாதிப்பிற்கான அறிகுறியாகும்.
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். இதன்மூலம் சிறுநீரக பாதிப்பில் இருந்து விடுபட முடியும். உங்களின் இரத்த அழுத்தத்தை அவ்வப்போது சோதித்துப் பார்த்தல் அவசியம்.
அன்றாடம் உடற்பயிற்சி செய்தல், காய்கறிகள், பழங்கள் போன்ற நார்ச்சத்து அதிகம் கொண்ட உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்வதால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருப்பதுடன் சிறுநீரகப் பாதிப்பில் இருந்தும் தப்பலாம்.
குறிப்பிட்ட இடைவெளியில் இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை செய்வதன் மூலம் ஏதேனும் பாதிப்புகள் இருப்பின் அது விரைவில் கண்டறியப்பட்டு விடும்.
நன்றி-Webdunia
சிறுநீரகக் கற்கள்
சிறுநீரகக் கற்கள்
சிறுநீரகக் கல் என்பது சிறிய படிகங்களை கொண்ட ஒரு திடப்பொருள் ஆகும். சிறுநீரகத்திலோ அல்லது சிறுநீரகக்குழாயிலோ ஒரே நேரத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கற்கள் இருக்கும்
காரணங்கள்
சில பொருட்களினால் சிறுநீர் அடர்கரைசலாகும் போது சிறுநீரகக் கற்கள் தோன்றலாம். சிறுநீரில் காணப்படும் இந்த பொருட்கள் சிறிய படிகங்களை உண்டாக்கி, அவை கற்க்களாக மாறலாம். சிறுநீர் கற்கள் உண்டாகி சிறுநீரகக் குழாய் வழியாக கீழே இறங்கும் வரை எந்த அறிகுறியையும் ஏற்படுத்தாது. சிறுநீரகக் கற்கள் சிறுநீர் குழாய் வழியாக கீழ்நோக்கி நகரும்போது வலியினை ஏற்படுத்தும். இவ்வலியானது, அடிக்கடி பின்புற விளாவின் இரண்டு பக்கங்களிலும் ஆரம்பித்து கீழ்நோக்கி நகரும்.
கற்களின் வகைகளாவன
- கால்சியம் கற்கள் அதிகமாக ஏற்படக்கூடியவை, அவை இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமாக ஆண்களுக்கு ஏற்படும். சாதாரணமாக 20 வயது முதல் 30 வயதுடையவர்களுக்கு ஏற்படும். திரும்பத் திரும்பத் ஏற்படும் தன்மையுடையது. கால்சியம் பிற பொருட்களான ஆக்ஸலேட் (மிக அதிகளவிளான பொருள்), பாஸ்பேட் அல்லது கார்போனேட் போன்றவையுடன் சேர்ந்து கற்களை உண்டாக்கும்.
- யூரிக் அமில கற்கள் - இவைகளும் அதிக அளவில் ஆண்களுக்கு ஏற்படும்.
- ஸ்ட்ருவைட் கற்கலள்- (மெக்னீஸியம் அமோனியம்/ பாஸ்பேட் படிகங்களால் ஏற்படும் கல்) என்பது முக்கியமாக பெண்களில் சிறுநீர் குழாய் சம்பந்தமான தொற்று நோய் கண்டதினால் ஏற்படக்கூடியவை. அவை மிகப்பெரியதாக வளரக் கூடியவை. மேலும் சிறுநீரகங்கள், சிறுநீர்குழாய் அல்லது சிறுநீர் பையில் அடைப்பை ஏற்படுத்தக் கூடியவை.
அறிகுறிகள்
- பின்பக்க விலாவில் வலி அல்லது முதுகுவலி, ஒரு பக்கம் அல்லது இரணடு பக்கத்திலும் அதிகரிக்கும் வலி
- குமட்டல், வாந்தி
- அடிக்கடி சிறுநீர் கழித்தல்
- சிறுநீர் அளவு அதிகரித்தல்
- சிறுநீரில் இரத்தம் காணப்படுதல்
- அடிவயிற்றில் வலி
- வலியோடு கூட சிறுநீர் கழித்தல்
- இரவு நேரத்தில் அதிக அளவு சிறுநீர் கழித்தல்
- ஆணின் முதன்மை இனப்பெருக்க உறுப்பில் (டெஸ்டிகல்) வலி
- சிறுநீரின் நிறம் இயற்க்கைக்கு மாறாக காணப்படுதல்
எப்பொழுது மருத்துவ நிபுனரை அணுகலாம்?
சிறுநீர்கற்கள் இருப்பதற்கான அறிகுறிகளோ, சிறுநீரக கற்கள் திரும்பத்திரும்ப ஏற்படுவதற்கான அறிகுறிகளோ, சிறுநீர் கழிப்பது வலியுடன் கூடியதாக இருந்தாலோ, அனுதினம் வெளியேற்றப்பட்ட சிறுநீரின் அளவு குறைந்தாலோ, அல்லது பிற புதிய அறிகுறிகள் தோன்றினாலோ மருத்துவரை அணுகலாம்
தடுப்பு முறைகள்
சிறுநீரக கற்கள் இருப்பதற்கான சாத்தியங்கள் இருப்பின், அதிக அளவு தண்ணீர் உட்கொள்ளுதல் அவசியம். பொதுவாக ஒரு நாளைக்கு 6 முதல் 8 டம்ளர் தண்ணீர் குடிக்கச் செய்ய வேண்டும். சிறுநீரககற்களின் தன்மையை பொருத்து மருத்துவரின் ஆலோசனையின் படி, மருந்தோ அல்லது பிற முறைகளையோ கையாண்டு, கற்கள் திரும்பத் திரும்ப ஏற்ப்படுவதை தடுக்கலாம்.
நன்றி-IDNG
Wednesday, November 12, 2008
சிறுநீரகம்
பெருமளவு நீரைச் சேமிக்கும் சிறுநீரகம்
சிறுநீரை உருவாக்குவது சிறுநீரகம். சிறுநீர் ஒரு கழிவுப்பொருள். அதில் யூரியா, மேலதிக உப்புகள், கிரியற்றினின், நீங்கள் உட்கொண்ட சில மருந்துகள் என்பன நீரில் கரைந்த நிலையில் காணப்படும். இந்த சிறுநீர் உருவாக்கம் சிறுநீரகத்தியில் உள்ள கலன்கோளத்தில் இரத்தம் வடிக்கப்படும் செயன்முறையுடன் ஆரம்பிக்கும். இப்படி வடிக்கபபட்ட கலன்கோள வடிதிரவத்திலிருந்து குளுக்கோசு போன்ற மூலக்கூறுகள் முற்றாக உறிஞ்சப்படும். முக்கியமாக நீர் மீள அகத்துறிஞ்சப்படும். இவ்வாறு அகத்துறிஞசப்படாதுவிட்டால் ஒவ்வொருநாளும் பரல்கணக்கில் நாம் சிறுநீர் கழிக்க வேண்டிஏற்படும்.
கிட்னி சட்னியாகிவிட்டது என்ற வசனத்தை சினிமாவில் நீங்கள் கேட்டிருக்கலாம். உண்மையில் சிறுநீரகம் திடீரென தொழிற்பட மறுக்கும்போது சிறுநீர் உற்பத்தியாவது திடீரெனத் தடைப்படும். இதனை acute renal failure என்று சொல்வார்கள். இதேபோல சிறுநீரகம் கொஞ்சம் கொஞ்சமாகப் பழுதடைந்து செல்லுதல் chronic renal failure எனப்படும். அவ்வாறு சிறுநீரகம் பழுதடைய நீரிழிவு (Diabetes) உயர்குருதியமுக்கம் (Hypertension) போன்ற நோய்கள் காரணமாக அமைகின்றன. சிறுநீரகம் குறித்த நிலைக்குமேல் தொழிற்பட முடியாமல் போனால் சிறுநீரகத்தை மாற்றீடு (Renal replacement therapy) செய்ய வேண்டும். இது குருதிச் சுத்திகரிப்பாக (Dialysis) அல்லது சிறுநீரக மாற்று சிகிற்கையாக (Renal transplant) அமையலாம்.
சிறுநீரகம் என்றவுடன் பலருக்கு ஞாபகம் வருவது சிறுநீரக கல்தான். சிறுநீரில் வெளியேற்றப்படும் ஒட்சலேற்று பொசுபேற்று போன்ற உப்புக்கள் சேர்ந்து உருவாவது தான் இந்த கல். இது மண்போன்று சிறிய அளவில் இருக்கும்போது ஒரு பிரச்சனையுமில்லாமல் சிறுநீருடன் வெளியேறிவிடக் கூடும். பெரிய கற்கள் சிறுநீர்க் குழாய்களில் தடையை ஏற்படுத்துவதுடன் தாங்க முடியாத வேதனையையும் தரக்கூடும். நோவைப் பொறுத்தவரை மகப்பேற்று வேதனைக்கு அடுத்தபடியான கடுமையான வேதனை சிறுநீரக கல் தரும் வேதனை தான். தண்ணீர் குடிக்காமல் நீண்டநேரம் இருப்பவர்களுக்கு இவ்வகையான கற்கள் உருவாகலாம் என நீங்கள் அறிந்திருப்பீர்கள். தண்ணீர் பருகாமல் இருக்கும்போது நீரை இயன்ற மட்டும் சேமிப்பதற்காக சிறுநீர் செறிவாக்கப்படும். இதனால் கற்கள் உருவாகும் சாத்தியம் அதிகம். இது பழைய விடயம். புதிய விடயம் உன்ன தெரியுமா? மிகமிக அதிகமாக (ஏறத்தாழ 6-10 லீற்றர் நீரை ஒருநாளில்) பருகுபவர்களுக்கும் கல் ஏற்படும் வாய்ப்பு அதிகமாம். சிறுநீரகத்தில் உப்புக்கள் சேர்ந்து கல் உருவாகாமல் தடுக்க ஒருவகை புரத மூலக்கூறுகள் சுரக்கப்படுகின்றன. அதிகமான சிறுநீர் உருவாகும்போது இவை ஐதாக்கப்பட்டு விடுவதால் கல் தோன்றும் வாய்ப்பு அதிகமாம். எங்களுக்கென்ன, நாங்கள் எல்லாவற்றையுமே அளவோடு செய்பவர்கள் என்கிறீர்களா? என்றாலும் சிறுநீரக விடயத்தில் ஒரு கண் வைத்திருங்கள்.
Wednesday, November 5, 2008
சர்க்கரை நோயாளிகள் கடைபிடிக்க வேண்டியவை
பொதுவாக `வருமுன் காக்க' என்ற வாக்கின்படி, எந்தவொரு நோயும் வருவதற்கு முன் தற்காப்பாக இருந்து கொள்வதே சிறந்தது. ஒருவேளை நோய் வந்து விட்டது என்பதை அறிந்து கொண்டால், பதற்றப்படாமல், அதற்குரிய சிகிச்சையை சம்பந்தப்பட்ட சிறப்பு மருத்துவரை அணுகி எடுத்துக் கொள்ள வேண்டும்.
சர்க்கரை நோயும் அதேபோலத்தான். வீட்டில் தாய்-தந்தைக்கோ அல்லது மூதாதயர்களுக்கோ சர்க்கரை நோய் இருப்பின், அடுத்த சந்ததியினருக்கும் சர்க்கரை நோய் வரும் என்பது நியதி என்றாலும், அதற்காக அச்சப்பட வேண்டியதில்லை.
ஒரு வீட்டில் தந்தைக்கு சர்க்கரை நோய் இருந்து, அவரின் 2 மகன்களில் ஒருவருக்கு அதே பாதிப்பு இருக்கக்கூடும். அல்லது 2 பேருக்குமே சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகளும் உண்டு.
குறிப்பிட்ட வயதிலிருந்தே அதாவது, 20 வயது வாலிபப் பருவம் முதலே உரிய உணவுக் கட்டுப்பாட்டுடன் உடற்பயிற்சியும் செய்து வந்தால், சர்க்கரை நோய் வருவதில் இருந்து தப்பிக்கலாம்.
அதாவது கட்டுப்பாடின்றி இருப்பவர்களுக்கு 40 - 45 வயதில் சர்க்கரை நோய் உறுதிப்படுத்தப்பட்டால், முறையான உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடிப்போருக்கு அதனை சுமார் 55 வயது வரையிலும் தள்ளிப்போடலாம். எனவே பரம்பரை சர்க்கரை வியாதியைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை.
இன்றைய கால கட்டத்தில் சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. உடல் உழைப்பு இல்லாமையே முழுமுதற் காரணம் என்றால் மிகையில்லை.
பல மணி நேரம் இருக்கையில் அமர்ந்த நிலையிலேயே பணியாற்றுவது, கணினி முன் அமர்ந்து ஏதாவது எண்ணெயில் வறுத்த சிப்ஸ் போன்றவற்றை சாப்பிட்டுக் கொண்டே வேலை செய்தல், அதிகப்படியான உடல் உழைப்பு இல்லாத வேலைகளைச் செய்தல் போன்றவற்றால் மிகக் குறைந்த வயதிலேயே சர்க்கரை நோய் ஏற்படுகிறது.
பரம்பரையாக தந்தை, தாய்க்கு சர்க்கரை நோய் இருந்து அடுத்த தலைமுறையினருக்கு சர்க்கரை நோய் வருவதில் ஆச்சர்யமில்லை.
ஆனால், பரபரப்பான உலகில் ஒரு சில குழந்தைகளுக்கும் கூட சர்க்கரை நோய் வந்திருப்பது ஆச்சரியமளிக்கிறது.
சிலருக்கு சிறு வயதிலேயே அதாவது 20-25 வயதிற்கெல்லாம் டயாபடிஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு விடும். எனவே சர்க்கரை நோய்க்கும், வயதுக்கும் சம்பந்தமில்லை.
சர்க்கரை நோயாளியான பின் என்ன சாப்பிடலாம்? எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதே முக்கியம்.
சர்க்கரை நோய் என்பது உறுதிப்படுத்தப்பட்டவுடனேயே தினமும் `வாக்கிங்' செல்வதை வழக்கப்படுத்த வேண்டும். கூடுமானவரை அதிகாலையில் நடப்பது உடலுக்கும், மனதிற்கும் ஏற்றது. உடலில் சேரும் தேவையற்ற கொழுப்பானது சக்தியாக எரியப்பட்டு, புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது.
சர்க்கரை நோயால் உருவாகக்கூடிய பின் விளைவுகளைத் தவிர்க்க `வாக்கிங்' மிகவும் அவசியமான ஒன்றாகிறது.
பொதுவாக வாழைப்பழங்கள் அஜீரணத்தை குறைத்து உடலின் கழிவுகள் வெளியேற வழிவகுக்கும். ஆனால் சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழங்களை அறவே தவிர்ப்பது நல்லது. என்றாலும் டாக்டரின் பரிந்துரைப்படி தேவைப்பட்டால் வாழைப்பழங்களை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம்.
பழங்களைப் பொறுத்தவரை கொய்யாப்பழம், பேரிக்காய் ஆகியவை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட ஏற்றவை.
அரிசி சோறு 3 வேளையும் உண்பதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். மதியம் ஒருவேளை குறைவான அளவு அரிசி சோற்றுடன் அதிகளவில் காய்கறிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். காய்கறிகளும் பொறித்தவற்றை விடவும் வேகவைத்ததாக இருத்தல் சிறந்தது.
மற்ற இருவேளைகளிலும் சப்பாத்தி போன்ற கோதுமையினால் தயாரித்த உணவோ அல்லது கேழ்வரகு கஞ்சி போன்றவையோ சாப்பிடுதல் அவசியம். இதே போன்ற கட்டுப்பாடான, மருத்துவர்கள் பரிந்துரைத்த உணவு முறையைக் கடைபிடித்து அவ்வப்போது உரிய பரிசோதனைகளையும் செய்து வரும் சர்க்கரை நோயாளிகள் வேறு எந்த விளைவுகளைப் பற்றியும் கவலை கொள்ளத் தேவையில்லை.
சர்க்கரை நோயும், உணவுப் பழக்க முறையும்
இந்த வகை சர்க்கரை நோயானது உடல் பருமனுடன் தொடர்புடையது எனலாம். கட்டுப்பாடான உணவுப் பழக்க முறையால் ஆரோக்கியத்துடன் கூடிய உடல் எடையைப் பராமரித்தல் மற்றும் அன்றாட உடற்பயிற்சியால் இந்த வகை சர்க்கரை நோய் ஏற்படாமல் தவிர்க்கலாம்.
சுமார் 45 வயது முதல் 84 வயதுடைய 5 ஆயிரத்து 11 ஆண்கள் மற்றும் பெண்களிடம் உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையானது சர்க்கரை நோய் தாக்குதலை எந்தளவுக்கு ஏற்படுத்துகிறது என அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தினர்.
காய்கறிகளை அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக பச்சைக் கீரை வகைகளை அன்றாட உணவுடன் சேர்த்துக் கொண்டால் சர்க்கரை நோயில் இருந்து தப்பிக்க முடியும்.
இந்தவகை உணவு முறையைக் கடைபிடிப்பவர்களுக்கு 2ம் நிலை சர்க்கரை நோய் ஏற்படுவது 15 விழுக்காடு குறையும். அப்படியே சர்க்கரை நோய் ஏற்பட்டாலும் 5 ஆண்டுகள் வரை தாமதமாவது ஆய்வின் மூலம் தெரிய வந்தது.
அதே நேரத்தில் வெள்ளை பிரட், வறுத்த பீன்ஸ், அதிக கொழுப்புச் சத்து கொண்ட பால் பொருட்கள் போன்றவற்றால் 18 விழுக்காடு அளவுக்கு சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகரித்து இருந்தது.
இதன்மூலம் உணவுப் பழக்க முறை, தொடர் உடற்பயிற்சி ஆகியவை சர்க்கரை நோயை உருவாக்கும் தன்மை கொண்டவை என தெரிய வந்தது.
பக்கவாதத்தை முன்னறிந்து தடுக்கலாம்!
உணவு தட்டு கீழே விழுந்து அதில் இருந்த உணவுப் பொருட்கள் தரையில் சிந்துகிறது. இதனால் தான் ஏதோ தவறு செய்துவிட்டதாக கருதிய அந்த பெண், ஒன்றும் இல்லை கை தவறிவிட்டது என்று கூறி அங்கிருந்து நழுவ முயன்றார்.
அப்போது அவரது நடையிலும் மாற்றம் தெரியவே உடன் இருந்தவர்கள் மருத்துவரை அழைக்கலாம் என்று கூற, அந்த பெண்ணோ புதிய காலணியின் காரணமாகத்தான் தனது நடையில் தடுமாற்றம் இருப்பதாகக் கூறி அங்கிருந்து சென்றுவிட்டார்.
மாலை 6 மணிக்கு விருந்தில் கலந்து கொண்டவர்களுக்கு தொலைபேசி அழைப்பு வருகிறது... அந்த பெண்ணின் கணவர் பேசுகிறார்... என் மனைவிக்கு பக்கவாதம் வந்து மருத்துவமனைக்குக் சென்று கொண்டிருக்கிறேன் என்கிறார் பதட்டத்துடன்.
ஆம் இது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் நிஜமானக் கதை. அந்த பெண் ஒரு வேளை விருந்து நிகழ்ச்சியின் போதே மருத்துவரை அணுகியிருந்தால் பக்கவாதத்தை நிச்சயம் தடுத்திருக்கலாம் உரிய சிகிச்சையின் மூலம்.
உடலில் ஏதேனும் ஒரு பகுதியோ அல்லது கை, கால்களோ செயலிழந்து போவதை பக்கவாதம் என்கிறோம். பக்கவாத நோயால் உயிரிழப்புகள் ஏற்படுவதில்லை என்ற போதிலும் படுத்த படுக்கையாகின்றனர் என்பதுதான் சோகம்.
|
மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டு, ரத்த ஓட்டத்தில் தடங்கல் ஏற்படும் போது மூளைச் செல்களுக்கு ஆக்சிஜன் கிடைப்பது தடைபடுகிறது. அப்போது அந்த மூளைப் பாகம் இயக்கும் உடல் பகுதி செயலிழந்து போகிறது. இதனை ஐசெமிக் ஸ்ட்ரோக் என்கிறார்கள்.
மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் பாதிப்பு ஏற்பட்டு ரத்த போக்கு ஏற்படும்போது உண்டாகும் பக்கவாதத்தை ஹெமராஜிக் ஸ்ட்ரோக் என்கிறார்கள். இது உயிரையும் பறித்துவிடக்கூடியது.
தற்காலிகமாக உண்டாகும் பக்கவாதத்தை 24 மணி நேரத்தில் சிகிச்சை அளித்து குணமாக்காவிடில் அது ஐசெமிக் ஸ்ட்ரோக் ஆகிவிடும்.
பக்கவாதத்திற்கு பல அறிகுறிகள் உள்ளன. பக்கவாதம் வருவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்னர் இதற்கான அறிகுறிகள் தெரிந்து விடும். அப்போதே அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு வந்தால் அவர்களை பெரிய பாதிப்பில் இருந்து காப்பாற்றி விடலாம் என்றும் நம்பிக்கை அளிக்கின்றனர்.
அது என்ன அறிகுறிகள்... நமது உடலில் ஏதேனும் ஒரு பகுதியில் ஏற்படும் நடுக்கம், மரத்துவிடும்தன்மை போன்றவைதான் அவை என்கின்றனர்.
|
அந்த சமயத்தில் அவர்களை நாமே பரிசோதிக்கலாம். அதாவது அவர்களிடம் சத்தமாக சிரிக்க சொல்லுங்கள், 1 நிமிடம் ஏதாவது பேசச் சொல்லுங்கள், இரண்டு கைகளையும் மேலே தூக்கச் சொல்லுங்கள்.
இதில் ஏதாவது ஒன்றில் அவர்களுக்கு பிரச்சினை இருந்தாலும் அவர்களை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுங்கள்.
தற்போது மற்றொரு அறிகுறியும் இருக்கலாம். அதாவது அவரது நாக்கை நீட்டச் சொன்னால் அது ஏதாவது ஒரு பக்கமாக மட்டுமே நீளும். நேராக நீட்ட முடியாமல் போவதும் உண்டு. இதுவும் பக்கவாதத்திற்கான அறிகுறி தான். எனவே பக்கவாதம் பற்றிய சந்தேகம் எழுந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்வது சிறந்தது.
பக்கவாதத்தை குணமாக்க மாத்திரைகளும், அறுவை சிகிச்சை முறைகளும் உள்ளன. செயலிழந்த பகுதிகளுக்குக் கொடுக்கப்படும் தொடர் பயிற்சிகளும் பக்கவாதத்தை குணப்படுத்த உதவும்.
சின்ன சந்தேகம் ஏற்பட்டாலும் தாமதிக்காமல் மருத்துவமனைக்கு வந்தால் ஒருவரது வாழ்க்கையையேக் காப்பாற்றிவிடலாம். தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் வாழ்க்கையை மீட்டுத் தருவதில் அதிக சிக்கலை ஏற்படுத்தும்.
மாரடைப்பு நோய்க்கான அறிகுறிகள்
வலியின் தன்மையைப் பொறுத்து ஒருவருக்கொருவர் நோயின் தன்மை வேறுபடுகிறது. எனவே அறிகுறிகளை அறிந்து, அதற்கேற்ப உரிய மருத்துவர்களை அணுகி தகுந்த சிகிச்சையைப் பெற வேண்டும்.
அதைவிடுத்து, ஐயோ நெஞ்சுவலிக்கிறதே, மாரடைப்புதான் ஏற்பட்டு விட்டதோ என தவறான கணிப்பை உங்களுக்கு நீங்களே கொள்ள வேண்டாம்.
உடல் வலி, அழுத்தம், இறுக்கம் போன்றவை உடல் நலமின்மையை உணர்த்துகின்றன.
ஒருவருக்கு கடினமான நெஞ்சு வலி இருக்கும். ஆனால் அவருக்கு பெரிதாக ஒன்றும் இருக்காது. ஒரு சிலருக்கு லேசான வலி இருக்கும். ஆனால், நோய் தீவிரம் அதிகம் இருக்கக்கூடும்.
உங்களுக்குத் தோன்றும் அறிகுறிகளை மருத்துவப் பரிசோதனையின்போது மருத்துவரிடம் எடுத்துரைக்க வேண்டும்.
குறிப்பாக உடலின் எந்தப் பாகத்தில் வலி ஏற்படுகிறது? ஓய்வின்போது வலி குறைகிறதா? இரவு பகல் வேளைகளில் எப்போது வலி அதிகமாக உள்ளது? என்பன போன்றவற்றை சொன்னால், அதற்கேற்ப சிகிச்சை முறைகள் உள்ளன.
மாரடைப்பு நோயானது பல்வேறு விதமான அறிகுறிகளை உடையது. இதயத் தசைகள் இறந்து சிதைவுறுவதாலேயே மாரடைப்பு ஏற்படுகிறது. இதயத் தசைகளுக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கப் பெறாததால் ஏற்படும் அறிகுறிகளாவன:
நெஞ்சுப் பகுதியில் அழுத்தம் அதிகமாவது; அதிக வியர்வை; நெஞ்சு இறுக்கம்; மூச்சுத் திணறல்; இடது தோள்பட்டை கைகள், தாடை மற்றும் பற்களில்கூட வலி பரவுதல் போன்றவை.
ஆண்களுக்குப் பொதுவாக நெஞ்சுப் பகுதியில் அழுத்தம் அதிகமாவதுபோல் தோன்றும். பெண்களுக்கு மூச்சுத் திணறல், மேல்வயிறு எரிச்சல் தோன்றி வாந்தி, குமட்டலுடன் அதிக வியர்வை தோன்றக்கூடும்.
அறிகுறிகளைத் தெரிந்து கொண்ட பிறகு மருத்துவப் பரிசோதனைகளைச் செய்து கொள்ளலாம். இதற்காக மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இல்லை.
பரிசோதனைகளைச் செய்து கொள்வதன் மூலம் நோய் தீவிரமாவதைத் தடுக்கலாம்.
எனவே நெஞ்சுவலிக்கு ஏராளமான காரணங்கள் உள்ள நிலையில், அதனை மாரடைப்பு என்று தவறாக நினைத்து வருந்தத் தேவையில்லை.
உடல் எடையைக் குறைக்கும் உணவு முறை!
அதிக புரோட்டீன் சத்து கொண்ட அதே நேரத்தில் குறைவான கொழுப்புச் சத்து கொண்ட உணவினை உட்கொண்டாலே போதும் உடல் எடை குறையும். ஆனால் அவற்றைக் கடைபிடிப்பது தான் கடினமான ஒன்றாகும்.
உடலில் இருந்து அதிக கலோரி சக்தி வெளிப்படக்கூடிய வகையில் உடற்பயிற்சி செய்யலாம். அல்லது மொத்த உணவில் உள்ள கலோரியின் அளவைக் குறைக்கலாம். இவை எல்லாமே சொல்வதற்கு மட்டும் தான் எளிது.
ஒருபுறம் டயட்டில் இருக்கிறேன் என்று கூறிக் கொண்டு கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடும்பட்சத்தில் உடல் குண்டுக்கு மேல் குண்டாக அதிகரித்துக் கொண்டே போகும். அமெரிக்காவில் சுமார் 64 சதவீதம் பேர் அதிக எடை கொண்டவர்களாக இருக்கிறார்கள். இவர்களில் 23 சதவீதம் பேர் மிகமிக குண்டான தோற்றம் (Obesity) கொண்டவர்கள் என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
கனடாவைப் பொருத்தவரை 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் அதிக எடை கொண்டவர்களே. இங்கு 6 பேரில் ஒருவர் குண்டானவர்களாக இருக்கிறார்கள். இதிலிருந்து டயட், உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பதெல்லாம் ஏட்டளவிற்குத்தான் என்பது தெளிவாகிறது.
ஆனால் நடைமுறைக்கேற்றவாறு அன்றாடம் உணவுமுறை மற்றும் உடற்பயிற்சியைக் கடைபிடித்தால், பாதுகாப்பான முறையிலும், நிரந்தரமாகவும் உடல் எடையைக் குறைக்க முடியும்.
அதற்கான சில டிப்ஸ். படித்து விட்டு பயனுள்ள தகவல் என்று மட்டும் கூறாமல், பயன்படுத்தி பலன் அடையுங்கள்.
பொதுவாக உடலில் நமக்குச் தேவையான அளவு கலோரியை விட அதிக அளவில் கொழுப்பு சேர்ந்தாலே உடல் குண்டாகத் தோற்றம் அளிக்கிறது. தேவைக்கு அதிகமான கொழுப்பு உடலில் தேங்கியிருப்பதை கரைத்தலே எடை குறைப்பாகும்.
இதற்கு நீங்கள் சாப்பிடும் அளவு கலோரி சக்தியை விட உடலில் அதிக கலோரிகள் எரிந்து செயலாற்றச் செய்தல் வேண்டும். சாப்பிடும் அளவைக் காட்டிலும் அதிக அளவு சக்தியை உடல் பயன்படுத்திக் கொள்ளுமானால், உடலில் ஏற்கனவே சேர்ந்திருக்கும் கொழுப்பைக் கரைக்க ஏதுவாகும். குறைவாக சாப்பிடும்போது, உடலுக்குத் தேவையான சக்தியானது கொழுப்பின் மூலம் எரிந்து எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதே நேரத்தில் நீங்கள் எந்தவகை உணவை சாப்பிடுகிறீர்கள் என்பதும் மிக முக்கியம்.
சாப்பிடும் உணவானது உங்களின் உடல் எடை குறைப்புத் திட்டத்திற்கு மையமாக அமைய வேண்டியது அவசியம். எடுத்துக் கொள்ளும் உணவு வகைகளினால் புற்றுநோய் போன்ற நோய்களில் இருந்து வாழ்நாள் முழுவதும் உங்களைப் பாதுகாக்க வேண்டியதும் அவசியம்.
மாமிசத்தில் அதிக அளவிலான கொழுப்பு உள்ளது. அதுவே பழ வகைகளில் குறைந்த கொழுப்பு உள்ளது. என்றாலும் குறுகிய கால உடல் எடை குறைப்புக்கு பழங்களை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
அதிக அளவில் மாமிசங்களை சாப்பிடுவதால் பல்வnறு வகையான நோய்கள் ஏற்படுகின்றன. அதே நேரத்தில் அதிக பழங்களைச் சாப்பிடுவதால் புற்றுநோயிலிருந்து தப்பிக்கிறீர்கள்.
பழங்கள், காய்கறிகள், முழுவதும் தானியங்களிலான உணவுகள், குறைவான கொழுப்பு கொண்ட பால் உற்பத்திப் பொருட்கள் மற்றும் புரோட்டீன் உணவுகளே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உகந்தவை. எடையைக் குறைக்கும் தன்மை கொண்டவை. சில வகை உணவுகள் உங்களின் சக்தி தேவைக்கேற்ப இருப்பதுடன் உடனடியாக அதிக கொழுப்பை தருபவையாக அமைந்து விடலாம்.
கேக், கொழுப்பு நிறைந்த மாமிசம், பால், கிரீம், சாஸ் போன்றவற்றை அதிகமாக சேர்த்தல் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.
உடல் எடையைக் குறைப்பதற்காக சிலர் தடாலடியாக உணவினை குறைத்துக் கொண்டு, மெலிந்து பலவீனமான பின் மீண்டும் ஏற்கனவே இழந்ததற்கு மிச்சமாக அதிக அளவிலான உணவை எடுத்துக் கொள்வார்கள். இது தவறான அணுகுமுறை.
உடற்கூறு நிபுணர்கள் கருத்தின் படி, உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் படிப்படியாக எடையைக் குறைக்க முன்வர வேண்டும். பொதுவாக வாரம் ஒன்றுக்கு 450 கிராம் அளவிற்கே எடை குறைய வேண்டும். அப்போதுதான் உடலில் பாதிப்பு ஏற்படாது.
நாளொன்றுக்கு உங்களின் உணவு முறையில் சுமார் 500 கலோரி அளவுக்கு குறைவாக சாப்பிடுங்கள். இதன்மூலம் உடம்பில் ஏற்கனவே சேர்ந்திருக்கும் கொழுப்பில் இருந்து தேவையான கலோரிகள் அன்றாட சக்திக்காக எடுத்துக் கொள்ளப்படும். அல்லது 250 கலோரி குறைவாக சாப்பிடுவீர்களானால், 250 கலோரி அளவிற்கு உடற்பயிற்சி செய்தும் குறைக்க முடியும்.
குறைவான கலோரி சாப்பிடுவதுடன் உடற்பயிற்சியும் செய்வதால் குறையும் உடல் எடை நீடித்து நிரந்தரமாக இருக்கும். பாதிப்பும் ஏற்படாது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
காலை உணவை கண்டிப்பாக சாப்பிடுங்கள். வெறும் வயிற்றில் இருந்தால் மதிய உணவின் போது அதிகம் சாப்பிடத் தூண்டும். அதே போல மதிய உணவைத் தவிர்க்காதீர்கள். குறிப்பிட்ட நேரத்தில் குறைந்த அளவாவது சாப்பிடுதல் வேண்டும். சாப்பிடாமல் இருந்தால் உடல் எடை குறைந்து விடும் என்று நினைப்பது அறியாமை.
உணவில் குறைவான கொழுப்புச் சத்துக்கள் உள்ளனவா என்பதை அறிந்து அவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். திடஉணவின் அளவை குறையுங்கள். அதிக அளவில் திரவ உணவுகளை உட்கொள்ளுங்கள். குறிப்பாக தண்ணீர் அதிக அளவில் குடியுங்கள்.
உங்களுக்குப் பிடித்தமான உணவு வீட்டில் சமைத்திருந்தாலும் தேவைக்கு அதிகமாக சாப்பிட முடியவில்லையே என்று ஏமாற்றம் அடையாதீர்கள். உங்களின் உடல் எடை குறைகிறதா என்பதை குறிப்பிட்ட இடைவெளியில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
சாப்பிடாமல் இருந்து உடல் எடையைக் குறைக்கலாம் என்று கருதுவீர்களானால், அது உடல் பலவீனத்தையும், நோயையும் கொண்டு வந்து சேர்க்கும்.
சிரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஸ்லிம் ஆகுங்கள்!
நீரிழிவுக்கு தீட்டப்படாத கைக்குத்தல் அரிசி
| |||
| |||
|
சாதிக்காயின் மருத்துவ குணங்கள்
சாதிக்காய்க்கு சில நோய்களை தவிர்க்கும் இயற்கையான மருத்துவ குணங்கள் உள்ளன.
சாதிக்காய் உடலை வலிமையாக்கும்.
வாயுவினால் வயிறு உப்பசம், வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், அசீரண மந்தம், வாந்தி பேதியின் போது அதிக தாகம், ஒற்றைத் தலைவலி, மூச்சு இரைப்பு, இருமல், கண் ஒளி மங்கல், தூக்கமின்மை.
பெண்களுக்கு : மாத விலக்கின் போது வயிற்று வலி. அதிக உதிரப்போக்கு.
ஆண்களுக்கு : விந்துக் குறைவை போக்குகிறது.
சாதிக்காய் எண்ணெய்(தைலம்), பல்வலி, வாத நோய் ஆகியவைகளுக்கு வெளி உபயோகத்திற்கு பயன்படுகிறது.
ஹோமியோபதி எனும் ஜெர்மனி மருத்துவத்தில் சாதிக்காயிலிருந்து வீரியப்படுத்தி (பொடன்சி) தயாரிக்கப்பட்ட மருந்தின் பெயர் நக்ஸ்மாஸ்சாடா எனப்படும் இம்மருந்து சில மன நோய்க்குறிகளுக்கும் சில நோய்களை குணப்படுத்த பயன்பட்டு வருகிறது.
மனக்குறிகள் : தோல்வியான சம்பவங்களாலும் அல்லது வேறு காரணங்களாலும் அதிக மன வேதனையால் மன நிலை பாதிப்பு (லிபோதைமியா).
நினைவாற்றல் குறைப்பாட்டிற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.
1. புரதம், மாவு சர்க்கரைப் பொருள் அடங்கிய க்ளைகோ ப்ரோட்டீன் என்னும் சத்துப்பொருள் மூளையில் குறைந்து இருப்பது. அதாவது, இந்தச் சத்துப் பொருள் மூளையின் வெளிப்பகுதியில் (செரிப்ரல் கார்டெக்ஸ்), நரம்பு செல்களிலும் (நியூரான்), நரம்புகளிலும் நினைவுகளை அனுப்புவதில் ஊக்கமுடன் செயல்படச் செய்கிறது.
2. மூளையில் (தலைமிதழ்), ஒரு நரம்பிலிருந்து மற்றொரு நரம்பிற்கு (ஆக்ஸான், டென்ட்ரான்) தகவல்கள் கடந்து செல்லும்போது (டிரான்ஸ்மிஷன்), இரண்டு நரம்புகளும் இணையும் இடத்தில் (சைனாப்ஸ்) நினைவுகளின் உணர்ச்சி வேகம் (இம்பல்ஸ்) தாமதமாக செயல்படுவதால் ஞாபகம் உடனே வருவதில்லை.
விபத்தினாலும் அல்லது சில மருந்து வகைகள் சாப்பிட்டதாலும், கண்களில் கருவிழிக்கு (ஐரிஸ்) நடுவில் இருக்கும் கண்மணி (பியூபில்) என்னும் உறுப்பு, அதிக அளவில் விரிந்திருக்கும் கண் நோய், கண்மணியில் செயல்படும் தசைகள் (ஸ்பிங்டர் மஸில்) பாதிப்பினால் ஏற்படுகிறது.
மேற்கண்ட இரண்டு பாதிப்புகளுக்கும் (ஞாபக மறதி, கண் நோய்) நக்ஸ்மாஸ்சாடா என்னும் மருந்து செயல்படுகிறது.
பெண்களுக்கு : சீரற்ற காலத்தில் கொஞ்சமாகவும், அதிகமாகவும் மாறுதலாக வெளியாகும் மாதவிடாய்ப் போக்கு, நீடித்திருக்கும் மாதவிடாய் (மெனோஸ்டேக்ஸிஸ்) மாதவிடாய் வராத காலத்திலும் கருப்பையில் உதிரப்போக்கு, இரத்தமுடன் வெள்ளைப்படுதல் (லியுகோரியா).
இதர நோய்க்குறிகள் :
வாத நோயில், வலது இடுப்பிலிருந்து, வலது முழங்கால் மூட்டு வரை வலி, குறிப்பாக மாடியில் ஏறும்போது அதிக வலி, அசைவுகளால் வலி அதிகம், நடப்பதற்கு தடுமாறுதல் (ஸ்டேகர்).
தொண்டை வறட்சி, வயிற்றில் அதிகக் காற்று சேர்ந்து வயிறு உப்புசமாகவும், அசீரணக் கோளாறும் (டிஸ்பெப்சியா) இருக்கும்.
தூக்கமின்மையால் சில நோய் பாதிப்புகள், தூங்கியவாறு சோம்பி இருத்தல், உணர்வற்ற நிலையில் (கோமா/ஸ்டூபர்) இருத்தல்.
சில வகை கீரைகளின் மருத்துவ குணங்கள்
புளிச்ச கீரை: உடலுக்கும் குடலுக்கும் வளமூட்டும். வயிற்றுப் புண்ணை ஆற்றும். வயிற்றுக் கடுப்பு உள்ளவர்கள் இக்கீரையை வெங்காயம், வெந்தயம் போட்டு மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் உடனே நிவாரணம் தெரியும். குடல் பலவீனத்தால் ஏற்படும் பேதி நிற்கும், குருதிப் போக்கை குறைக்கும்.
சிறுகீரை- உடல் தளர்ச்சியை போக்கி ஊக்கமூட்டுவது, மலச்சிகலைப் போக்குவது, குடலின் பலத்தை அதிகரிப்பது, உடல் பித்தத்தை குறைப்பது.
வெந்தயக்கீரை- முருங்கை போலவே இரும்புச் சத்துடையது. உடலுக்கு ஊக்கத்தை அளிப்பது, வயிற்றுப்புண்ணை ஆற்றுவதில் சிறந்தது, கண்ணிற்கு மிகவும் நல்லது, பேதி சயமயத்தில் சப்பிட்டால் பேதியை கட்டுபடுத்தவல்லது.
அரைக்கீரை: நீலிக்கு அடுத்து விஷங்களை முறிக்கும் ஆற்றல் அரைக்கீரைக்கு உண்டு. ஆங்கில மருந்துகளின் வேகத்தை பக்க விளைவுகளை முறியடிக்கும், தேமல், சொறி சிரங்கு உள்ளவர்கள் இந்தக்கீரையை தினசரி உணவுப்பழக்கத்தில் சேர்த்துக் கொண்டால் குணமாகிவிடும்.
அகத்திக் கீரை-வெப்பத்தை தணிக்கும், உள் சூட்டை அகற்றுவதால் இதற்கு அகத்தி என்ற பெயர் ஏற்பட்டது, அனைத்து வகையான சத்துகளையும் உடையது இந்த கீரைதான், குடல், குருதியை தூய்மைப் படுத்தும். குடற்புழுவை கொல்லும், பித்தத்தை தணிக்கும். தலைச்சுற்று, மயக்கம் ஆகியவற்றைப் போக்கும், உடலில் எந்த வகையில் விஷம் சேர்ந்திருந்தாலும் அதை முறிக்கும் தன்மை இதற்குண்டு, ஆனால் இதை அடிக்கடி சாப்பிட்டால் பேதி ஏற்படும்.
பசலைக்கீரை-பருப்புக்கீரை
குளிர்ச்சி தருவதில் சிறந்தது, நீர் உடலினர் அடிக்கடி சாப்பிடக்கூடாது. நீரைப் பெருக்கும். பால் சுரக்கும். வயிற்று புண்ணாற்றும், கண்ணொளி தரும்.
மணத்தக்காளி கீரை- அல்சரை ஆற்றுவதில் முதன்மையானது, குடலுக்கு பலமளிப்பது, பெண்மையை வளர்ப்பது, மங்கையருக்கு மார்பை வளரச்செய்வது, கருப்பை குறைப்பட்டாஇ நீக்குவது, குடற்புழுவை அகற்றுவது.
பாலக்கீரை- உடலுக்கு வலுவூட்டுவது, மலச்சிக்கலைப் போக்கும். குளிர்ச்சியை தரும். குடல் நோய்களுக்கு நல்லது.
குமட்டிக் கீரை- இது தாமிரச் சத்துடையது. குருதியை தூய்மைப் படுத்துவது மலத்தை இளக்கும் தன்மை உடையது, கருவுற்ற மகளிருக்கு இது நல்லது, உடல் நீரை அதிகரிக்கவல்லது.
தொய்யல் கீரை- தொய்ந்து போன நாடி நரம்புகளை வலுவாக்கும், உடலுக்கு ஊக்கமூட்டுவது, குளிர்ச்சியானது, செரிப்பாற்றலை மிகுவிக்கும், மலச்சிக்கலை போக்கும், வாத நோயாளிக்கு ஏற்றது, பேறு காலத்திற்கு பின்பு மகளிர் சாப்பிட ஏற்றது. உடலைத் தேற்றும்.
திக்குவாயிலிருந்து மீளுதல் - சில யோசனைகள்
திக்கிப் பேசுபவர்களுக்கு தான் என்ன பேச வேண்டும் என்று நன்றாக தெரியும். ஆனால் ஒரு சில கணத்திற்கு அவர்களால் வெளிப்படுத்த முடியாததற்கு காரணம் அறியாமல் திரும்பத் திரும்பக் கூறியதையே கூறுவது, நீண்ட நேரம் எடுத்துக் கொள்வது, பேச்சொலியில் நிறுத்தம் ஏற்படுதல். திக்குவாய் பொதுவாக நரம்பியல் நேரம் தவறுதலால் ஏற்படுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது பேசும்போது திக்குபவர்கள் எப்போது தான் நினைத்ததை கூறுவது என்பதில் நரம்பியல் நேரம் தவறுகையால் குழப்பமடைகிறார்கள். பேச்சு என்பது வெறும் நாக்கின் சுழற்சி மட்டுமே அல்ல பேசும்போது மனம், உடல் மற்றும் மூளை ஒருங்கிணைப்பு இருப்பது அவசியம்.
அனைத்து உடல் செயற்பாடுகள் போலவே பேச்சும் நரம்பு-தசை ஒருங்கிணைப்பால் நிகழ்வதே. மூளையின் மின் ரசாயன செய்திகளை குறிப்பிட்ட தசை குழுவிற்கு அனுப்புவதில் நரம்பு-தசை ஒருங்கிணைப்பு ஈடுபட்டுள்ளது. சில சமயங்களில் உணர்ச்சி நிலைகளில் கட்டுபாடுகளை ஏற்படுத்த முடியாத சூழ் நிலையில் நரம்பு-தசை அமைப்பு செயல் தடைபடுகிறது. இது சாதாரண பேச்சு உள்ளவர்களை விட திக்கு வாய் உள்ளவர்களுக்கு அடிக்கடி தடைபடுகிறது. தனக்கு அச்சமூட்டுவதாக அவர் நினைக்கும் சூழலில் திக்குவாய் உள்ளவர்கள் ஏற்படுத்திக் கொள்ளும் மன தடையால் நரம்புகள் ஒத்துழைக்காமல் சுருங்குவதால் பேச்சுத் தடை ஏற்படுகிறது.
உணர்ச்சி நிலையில் ரிலாக்ஸாக இருக்கும்போது திக்குவாய் உள்ளவர்களும் சரளமாக பேசுவதை நாம் பார்க்க முடியும். மன அழுத்த சூழ்நிலையில் தடுமாற்றம் ஏற்படுகிறது. பள்ளியில் அட்டன்டன்ஸ் எடுக்கும்போது, தொலை பேசியில் பேசும்போது, சிலரிடம் அதிகாரமாக பேசும்போது, குழுவில் பேசும்போது, வேலை நேர்முகத் தேர்வின் போது, என்று இவர்களுக்கு நெருக்கடி நிலைகள் அதிகம்.
எனினும் திக்குவாய் குறித்த இன்னொரு அதிசயம் என்னவெனில் இவர்கள் தடையின்றி பாடுவதைக் கூட சில சமயங்களில் நாம் பார்க்கலாம். ஏனெனில் அடுத்தவார்த்தை என்னவென்று முன் கூட்டியே தெரிந்து விடுவதால், நரம்பியல் நேரம் தவறுகை பேச்சில் நிகழ்வது போல் இவர்களுக்கு பாட்டில் ஏற்படுவதில்லை. உரையாடலின் போது இது போன்ற நன்மை இல்லையாதலால் அடுத்த வார்த்தையை யோசிக்கும் தருணத்தில் பேச்சு தடுமாற்றம் ஏற்படுகிறது, இது திரும்ப திரும்ப நடக்கும்போது பயம் தோன்றி மேலும் திக்குதலை அதிகமாக்குகிறது. மற்றபடி அவர்கள் மற்ற மனிதர்களை போல்தான். சிலர் அதி புத்திசாலிகளாகவும் இருப்பதை நாம் பார்த்திருக்கலாம்.
சில மன நோய் நிபுணர்கள் தூக்க மாத்திரைகளை கொடுத்து மன அழுத்தத்தை குறைத்தால் பேச்சு சரளமாக வரும் என்று அத்தகைய மாத்திரைகளை தருகின்றனர். ஆனால் இது பிரச்சனிகளை மேலும் சிக்கலாக்குவதாக பேச்சு பயிற்சி சிகிச்சை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். திக்குவாய்க்கு ஹிப்னாடிஸ சிகிச்சையும் பெரிய பலன்களை ஏற்படுத்தவில்லை என்று நிபுணர்கள் கருதுகின்றனர். ஹிப்னாடிச மயக்கத்தில் சரளமாக பேசும் திக்கு வாய்காரர்கள் மயக்க நிலையில் இருந்து மீண்டதும் திக்கி பேச துவங்கிவிடுகின்றனர். யோகா மற்றும் தியானம் ஆகியவைகளில் உணர்வு மற்றும் புத்திசார்ந்த நிலைகளில் மேலதிக சம நிலை ஏற்படுவதால் திக்குவாய்க்கு இந்த பயிற்சிகளே சிறந்தது. பேச்சு எப்படி இயல்பானதோ திக்குவதும் இயல்பானதே இது பெரிய நோய் என்றெல்லாம் கூறமுடியாது, எனவே சில பல வாழ் முறை நடைமுறை அளவுகோல்களிலேயே இதை தீர்க்க முடியும்.
திக்குவாய் உள்ளவர்களிடம் பேசும்போது நாம் எந்த வித அணுகுமுறையைக் கொள்ளவேண்டும் என்பது கீழ்வருமாறு :
என்ன கூறுகிறார் என்பதில் கவனம் செலுத்த வேண்டும் எப்படி கூறுகிறார் என்பது முக்கியமல்ல.
பொறுமையாக கேட்கவேண்டும், அவர்களை அவசரப்படுத்துவது கூடாது.
பேசும்போது இயல்பாக அவர்கள் கண்களை நேருக்கு நேர் பார்க்கவேண்டும்.
இவர்களுக்கு பேச்சில் தடையே தவிர சொல்ல வரும் விஷயத்தில் தடை எதுவும் கிடையாது. எனவே அவர்கள் குழப்பமுள்ளவர்கள் என்று கருதுவதை தவிர்க்கவேண்டும்.
தொலைபேசியில் இவர்கள் பேசும்போது நீண்ட நேரம் எடுத்துக் கொண்டால் ஃபோன் லைனை துண்டித்து விடவேண்டாம்.
திக்குவாய் உள்ளவர்கள் தங்களை கேட்பவரிடமிருந்து தங்கள் திக்குவாய் கோளாரை மறைக்க விரும்புவது வழக்கம். ஆனால் இதனால் மேலும் பேச்சு தடைகள் அதிகரிக்கவே செய்யும்.
இறுதியாக கூறவேண்டுமானால் திக்குவாய் உள்ளவர்கள் பேச்சு பயிற்சியில் தொடர்ந்து நம்பிக்கையுடன் ஈடுபட்டால் சரளப் பேச்சு கைகூடிவிடும். பொறுமையாகவும் விஞ்ஞான முறைப்படியும் தொழில்பூர்வமானவர்களின் வழிகாட்டுதலில் சிகிச்சை எடுத்துக் கொண்டால் நிச்சயம் இதிலிருந்து வெற்றிகரமாக மீண்டு வரமுடியும்.
உடலுக்கு உகந்த பாகற்காய்!
அவ்வாறு இல்லாமல், அறுசுவைகளில் நமது உடலுக்கு நல்லதைத் தரும் இந்த கசப்புச் சுவையிலான பாகற்காயை வாரத்தில் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
பொதுவாக பாகற்காய் உடலுக்கு உஷ்ணத்தைக் கொடுக்கும். பாகற்காயில் இரண்டு வகைகள் உண்டு. பொடியாக இருக்கும் பாகற்காயை மிதி பாகற்காய் என்றும், நன்கு பெரிதாக நீளமாக இருப்பதை கொம்பு பாகற்காய் என்றும் அழைக்கிறார்கள்.
பாகற்காயை நாம் எப்படி வேண்டுமானாலும் சமைத்து சாப்பிடலாம். புளியுடன் சேர்த்து பாகற்காயை சமைப்பது சிறந்தது என்று சொல்லப்படுகிறது.
நீரிழிவு வியாதி உள்ளவர்கள் பாகற்காய் சாப்பிட்டால் மிகவும் நல்லது. அவர்கள் மட்டுமல்லாமல் ஜூரம், இருமல், இரைப்பு, மூலம், வயிற்றில் பூச்சித் தொல்லை இருப்பவர்களும் பாகற்காயை உண்ணலாம்.
இந்த பிரச்சினைகள் இருப்பவர்கள் மட்டும்தான் பாகற்காய் சாப்பிட வேண்டும் என்ற அவசியமில்லை. இதுபோன்ற பிரச்சினைகள் வர வேண்டாம் என்றால் எல்லோருமே சாப்பிடலாம்.
பாகற்காய் நமது நாவிக்குத்தான் கசப்பேத் தவிர உடலுக்கு இனிப்பானது.
பாகற்காயை விட பாகற்காயின் இலையில் அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன. அதன் சாறு பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.
பாகற்காயின் இலைகளை அரைத்து உடல் முழுவதும் பத்துப்போட்டால் சிரங்கு ஒழிந்துவிடும்.
இதேப்போல பாகற்சாறும் உடலுக்கு மிகவும் ஏற்றது. ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு விதத்தில் பாகற்காய் இலையின் சாறைக் குடிக்க நோய் கட்டுப்படும்.
மஞ்சள், மிளகுப் பாலின் மகத்துவம்!
பழம்பெருசுகள் இதுபோல பேசுகிறார்களே என்று சாதாரணமாக அவர்களை எடைபோட்டு விட முடியாது. சவடால் பேச்சுக்கு ஏற்ப அவர்களிடம் விஷயமும் இருக்கும்.
இப்படித்தான் ஒரு நண்பர் வேலை நிமித்தமாக நிறைய ஊர்களுக்குச் சென்று விட்டு, கடைசியாக திருநெல்வேலி பக்கமுள்ள கடையத்திற்குச் சென்றுள்ளார்.
பல்வேறு ஊர்களில் சுற்றித் திரிந்த களைப்பு, ஆங்காங்கே குடித்த தண்ணீர் என இருமல், சளி என்று மாட்டிக்கொண்டார்.
கடையத்தில் அவர் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் உள்ள வீட்டு திண்ணையில் இருந்த பெரியவர் ஒருவர், நண்பரின் இருமல் சத்தம் கேட்டு அவரை அழைத்தார்.
``என்ன தம்பி, இப்படி இருமுறீக... என்ன உங்களுக்கு உடம்புக்கு...?''
``ஒண்ணுமில்ல, தாத்தா. அங்கங்க சுத்துனது ஒத்துக்கல. அதான் இருமல் அதிகமாயிடுச்சி''
``அவ்வளவுதானே, பக்கத்துல இருக்கற பால் கடையில போய், மஞ்சள், மிளகுத்தூள் போட்டு ஒரு பால குடிச்சிட்டு வாங்க. எல்லாம் சரியாப் போயிடும்'' - என்றார் பெரியவர்.
அதேபோல் நண்பரும், மிளகுப் பொடி, மஞ்சள் தூள் கலந்து ஒரு 200 மி.லி. அளவு பாலை குடித்து விட்டு அன்று நிம்மதியாகத் தூங்கியுள்ளார். அடுத்த நாளே நல்ல பலன் தெரிந்ததாகக் கூறி, புளகாங்கிதம் அடைந்தார் அவர்.
சரி, விஷயத்துக்கு வருவோம். நாள்பட்ட சளி, இருமலுக்கு அருமருந்து மஞ்சள் மற்றும் மிளகுத் தூள் என்றால் மிகையாகாது.
விடாமல் அடிக்கடி இருமிக் கொண்டிருப்பவர்களும், நெஞ்சில் சளி உறைந்திருப்பவர்களும் குறைந்தது ஒரு வாரத்திற்கு இரவில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள், மிளகுத்தூளை சேர்த்து அருந்தி வரவேண்டும். நான்கைந்து நாளிலேயே சளி, இருமல் பறந்தோடி விடும்.
இந்த வைத்தியத்தைத்தான் இன்றளவும் கிராமங்களில் பலர் கடைபிடிக்கிறார்கள்.
மிளகையும், மஞ்சளையும் சமையலில் அன்றாடம் நாம் சேர்த்துக் கொள்வதற்குக் காரணம் அவற்றின் மருத்துவ குணங்களால் தான்.
பொதுவாக மஞ்சள் ஒரு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இது உடலில் உட்புகும் நோய்க்கிருமிகளை அழித்தொழிக்கும் ஆற்றல் பெற்றது.
அதேபோல மிளகுக்கும் அதீத மருத்துவ சக்தி உள்ளது. உடலில் உருவாகும் வாய்வுத் தொந்தரவுகளை அறவே நீக்குகிறது. சளியை விரட்டும் சக்தி மிளகுக்கு உள்ளது.
மிளகின் காரமும், மஞ்சளின் நோய் எதிர்ப்பு சக்தியும் ஒருங்கே உடலில் சேரும்போது, இருமலாவது, சளியாவது, போயே போயிடும்.
வாயுத் தொல்லையைப் போக்கும் வெள்ளைப் பூண்டு
ஏற்கனவே மிளகு, மஞ்சள் பால் பற்றி அறிந்தோம். தற்போது வெள்ளைப் பூண்டு பற்றி அறிவோம்.
வாயுத் தொல்லை என்பது பொதுவாக 35 வயதைக் கடந்த அனைத்து தரப்பினருக்குமே இருக்கக்கூடிய ஒரு இன்னல் எனலாம்.
ஒரு சிலருக்கு சிறிய அளவு உருளைக்கிழங்கை சாப்பிட்டாலே இந்த வாயுத் தொல்லை ஏற்படும். வேறு சிலருக்கு பருப்பு மற்றும் அவற்றில் செய்யப்படும் பதார்த்தங்களினால் வாயுத் தொந்தரவு உருவாகும்.
வாயுத்தொல்லைக்கு ஏற்ற அருமருந்து வெள்ளைப் பூண்டு.
முடிந்தால் அப்படிய 4 பல் பூண்டை தோலுரித்து சாப்பிடலாம். அல்லது அடுப்பில் வைத்து கருகும் அளவுக்கு சுட்டு, பின்னர் அதன் தோலை உரித்து பாலுடன் சேர்த்து உண்ணலாம்.
வாயுத்தொல்லை இருப்பவர்கள் பூண்டு சாப்பிட்ட உடனேயே அதில் இருந்து விடுபட்டதை உணரமுடியும். வேண்டுமானால் பூண்டு காரம் போக, மோர் அருந்தலாம்.
பொதுவாக உணவுக்குப் பயன்படுத்தும் குழம்பில் வெள்ளைப்பூண்டை அன்றாடம் சேர்த்துக் கொள்வது சிறந்தது.
பெண்கள் குழந்தை பெற்ற பின் அதிகளவு சோர்வு இருக்கும் என்பதால், வாரத்திற்கு 2 அல்லது 3 நாட்கள் பூண்டு குழம்பை சாதத்துடன் கொடுப்பார்கள். தவிர தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு பூண்டு மிகவும் சிறந்ததாகும்.
எனவே பூண்டை அன்றாடம் சிறிதளவாவது சேர்த்துக் கொள்ளப் பாருங்கள்.
உடல் சூட்டைத் தடுக்கும் நல்லெண்ணெய்
நல்லெண்ணை அல்லது எள் எண்ணெய் என்று நாம் இதனைக் கூறுகிறோம். எள் என்பது பல்வேறுபட்ட மருத்துவ குணங்களைக் கொண்டது.
எள்ளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயே நல்லெண்ணெய். பொதுவாக கிராமங்க்ளில் ஒரு பழமொழி கூறுவார்கள்.
``வைத்தியருக்குக் கொடுப்பதைக் காட்டிலும் வாணிபருக்குக் கொடுக்கலாம்''- என்பதே அது.
அதாவது வைத்தியர் - டாக்டரிடம் செல்லாமல் இருப்பதற்கு, எண்ணெய் விற்கும் வாணிபருக்கு பணம் கொடுக்கலாம். எனவே அதிக எண்ணெய் வாங்கிப் பயன்படுத்தினால், வைத்தியச் செலவு இருக்காது என்பதே நம் முன்னோர் நமக்குக் கற்றுத் தந்த பாடம்.
உடல் சூட்டைத் தணிப்பதில் நல்லெண்ணெய் முக்கியப் பங்கினை வகிக்கிறது.
உடல் சூட்டால் வயிறு எரிச்சல், மலச் சிக்கல், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், ஒருவித பாரத்துடனான தலைவலி போன்ற எண்ணற்ற நோய்கள் ஏற்படுகின்றன.
இவற்றுக்கெல்லாம் ஒரே தீர்வு. வாரம் ஒரு முறை நல்லெண்ணெயை உச்சி முதல் உள்ளங்கால் வரை உடல் முழுக்க நன்றாகத் தேய்த்து, இளஞ்சூட்டில் வெந்நீர் வைத்து, நல்ல சீயக்காயைத் தேய்த்துக் குளிப்பதே.
`சனி நீராடு' என்பதன் பொருளும் அஃதே. நல்லெண்ணெய் குளிர்ச்சியைத் தருவதோடு, உடலில் இருக்கும் தேவையற்ற கசடுகளை வெளியேற்றுவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. தவிர மேனிக்கு புதுப்பொலிவையும் நல்லெண்ணெய் அளிக்கிறது.
இதன் காரணமாகவே பெண்கள் பூப்பெய்தவுடன் நல்லெண்ணெயுடன் உளுந்தில் செய்யப்பட்ட கழியையும் சேர்த்து சாப்பிடக் கொடுப்பார்கள். உளுந்தும் உடலுக்கு குளிர்ச்சி என்பதால், உடலின் சூட்டைத் தடுக்கவே இவற்றைத் தருகிறார்கள்.