Wednesday, November 5, 2008

நீரிழிவுக்கு தீட்டப்படாத கைக்குத்தல் அரிசி

நீரிழிவு நோயாளிகள் தீட்டப்படாத புழுங்கல் அரிசியை உட்கொண்டால் நல்லது என்று மருத்துவர் மோகன் தெரிவித்துள்ளார்.

மெட்ராஸ் நீரிழிவு நோய் சிறப்பு மையத்தின் தலைவர் மருத்துவர் வி.மோகன் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைக் கூறினார்.

இந்தியாவில் 4 கோடி பேர் நீரிழிவு (சர்க்கரை) நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலை 2025-ம் ஆண்டு 7 கோடியை தாண்டும் என்று கணக்கிடப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

பெற்றோர்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால் குழந்தைகளுக்கு நீரிழிவு நோய் வருவது நிச்சயம் ஆனால் பெற்றோருக்கு இல்லாமலும் இப்போது உள்ள உணவு பழக்க வழக்கத்தினாலும் உடற்பயிற்சி இல்லாததாலும் நீரிழிவு நோய் வருகிறது.

முந்தைய காலத்தில் அரிசி, கோதுமை, கேழ்வரகு, சோளம் உள்ளிட்ட தானியங்களையும் அதன் தவிட்டுசத்துபோகாமல் கையால்குத்தி சமைத்து உட்கொண்டு வந்தார்கள். ஆனால் இப்போது நன்றாக தீட்டி அதாவது பாலிஷ் செய்து சாப்பிடுகிறோம். அதனால் அதில் உள்ள சத்துக்கள் போய்விடுகின்றன.

எனவே எல்லோரும் குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் சிவப்பு அரிசி அதிலும் கைகுத்தல் அரிசியை சமைத்து உட்கொண்டு வந்தால் மிகவும் நல்லது. அதிலும் அதிகமாக வேகவைக்காமல் சோறு சிதைந்து போகாத வகையில் சாப்பிடுவது நல்லது. எளிதில் ஜீரணமாகாத வகையில் சோறு இருப்பது நல்லது.

கீரைகளையும் பீன்ஸ், கேரட், பாகற்காய், சுரைக்காய், பூசணிக்காய், வெண்டைக்காய், புடலங்காய் உள்பட அனைத்து காய்கறிகளும் சாப்பிடலாம்.

ஆனால் உருளைக்கிழங்கு உள்ளிட்ட அனைத்து கிழங்கு வகைகளை சாப்பிடக்கூடாது.

எண்ணையை பொறுத்தவரை நல்லெண்ணை, கடலை எண்ணை சேர்த்துக்கொள்ளலாம். பச்சைபயறு, பயறு, உளுந்து உள்ளிட்ட அனைத்து பயறுகளையும் வேகவைத்து அல்லது முளை கட்டி வேகவைத்து சாப்பிடுவது நல்லது. நாவல்பழம், கொய்யாபழம், பப்பாளிபழம் ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளலாம். பலாப்பழம், மாம்பழம் ஆகியவற்றை சாப்பிடக்கூடாது. மாம்பழத்தை ஆசைப்பட்டால் சிறிதளவு சாப்பிடலாம்.

முட்டையை அவித்து அதன் வெள்ளைக்கருவை சாப்பிடலாம். மீன், கோழிக்கறி ஆகியவற்றை சாப்பிடலாம். நீரிழிவு நோயாளிகள் தினமும் மல்டி வைட்டமின் மாத்திரை சாப்பிடுவது நல்லது என்று அவர் தெரிவித்தார்.



No comments: