Wednesday, July 8, 2009

ஆரோக்கிய வாழ்விற்கு சிவப்பு வைன் (RED WINE)

நம்முடைய உணவுப்பழக்கவழக்கங்கள் வித்தியாசமானவை. அவை காலநேர சூழலுக்கேற்ப மாறிக்கொண்டே இருக்கின்றன. பழையகாலத்தில் மிருகங்களை வேட்டையாடி புசித்த மனிதன், காலப்போக்கில் பயிரிட்டு கிடைக்கும் காய்கறி, பழங்கள் என உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொண்டான். இன்றைக்கும் சில உணவுப் பழக்கங்களை நாம் மோசமானது என்று விலக்கிக் கொண்டிருக்கிறோம். அவற்றை எந்தக்காலத்திலும் பயன்படுத்தக் கூடாது என்றும் முடிவு செய்து தவிர்த்து விடுகின்றோம். ஆனால் அவற்றை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் சாப்பிடலாம் என்று டிக்' அடிக்கின்றனர்! உதாரணத்திற்கு இங்கே சில உணவுகளை கொடுத்துள்ளோம். அவற்றை எதற்காக சாப்பிடலாம் என்றும் காரணத்தை விளக்குகின்றனர் மருத்துவ வல்லுனர்கள்.

சிவப்பு வைன்:(Red Wine)

பொதுவாகவே மது வகைகள் என்றால் அவை உடல் நலத்திற்கு கேடுதான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் எந்த விஷயத்திற்கும் விதிவிலக்கு ஒன்று இருக்குமல்லவா... அப்படித்தான் மதுவகைகளில் ஒன்றான சிவப்பு வைன் உடல் நலத்திற்கு நல்லது! உடல் நலத்திற்கு மட்டுமல்ல... மனசுக்கும் மிகவும் நல்லது என்று நிரூபிக்கபட்டுள்ளது.

சிவப்பு வைனில் பல நல்ல குணங்கள் அடங்கியுள்ளன என்று கூறுகிறது மருத்துவ சாஸ்திரம்.

நமது உடம்பில் உள்ள இரத்தக் குழாய்களை பாதுகாக்கும் குணமும் உண்டு. அதே போல் சிவப்பு வைனை சாப்பிட்டால் இதய நோய் தாக்கும் வாய்ப்பும் குறைவு. புற்று நோய் வரு வதை எதிர்க்கும் நோய் எதிர்ப்பு சக்தியும் ஏற்படுகிறது. ரெட் வைனை' சாப்பிடு வோருக்கு இதய நோய் வருவதில்லை. இதற்கு காரணம் சிவப்பு வைன் திராட்சை பழங்கள் மூலம் தயாரிக்கப் படுகிறது. திராட்சை பழத்தின் தோலில் இருக்கும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்' என்ற மூலப்பொருள் இதயத்தை பாதுகாக்கும் விதத்தில் செயற்படுவதே இதற்கு காரணம். மேலும் சிவப்பு வைன் சாப்பிடுவோருக்கு மறதிநோய், ஈறு நோய் ஆகியவை கட்டுப்படுகிறது. குடல் புற்று நோயை தடுக்கும் ஆற்றலும் சிவப்பு வைனுக்கு உண்டு.

வாரத்தில் ஒருநாள் 3 கப் சாப்பிடலாம். இது உடலில் உள்ள குளுக்கோஸை கட்டுப்படுத்தும். ஆனால் சிவப்பு வைனில் இருக்கும் குணங்கள், வெள்ளை வைனில் இல்லை. மிதமாக பியர் சாப்பிடுவதால் இதயத்தின் செயற்பாடு அதிகரிப்பதாக, பல்வேறு நாடுகளில் நம்பிக்கை உள்ளது.

நெய்:

இதில் தேவைக்கு அதிகமான கொழுப்பு சத்து உள்ளதால் நெய் சாப்பிடக்கூடாது என்ற கருத்தும் நம்மிடம் உண்டு. வயதாகி விட்டாலோ, உடம்பு குண்டாக இருந்தாலோ நெய்யை தொடவே கூடாது என்று நினைத்துள்ளோம் நாம். ஆனால் ஆயுர்வேத மருத்துவத்தில் நெய் மருந்துப் பொருளாக பயன்படுகிறது என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?! ஆனால் அதுதான் உண்மை. ஆயுர்வேதத்தில் இருக்கும் பல மருந்துகளில் குறிப்பிடத்தக்க இடத்தில் நெய் உள்ளது. நெய்யை சாப்பிட்டால் குண்டாவோம் என்பதும் தவறு. நெய்யை உருக்கும்போது தண்ணீர் தன்மை வெளியேறி தங்க நிறத்தில் வரும்போது, அதை சாப்பிட்டால் மாமிசத்துக்கு நிகரான சுவையை ருசிக்க முடியும். நெய்யில் இருக்கும் பீட்டா கரோட்டீன், விற்றமின் ஈ போன்றவை மூளைக்கு மிகவும் நல்லது. குடலில் உள்ள சுகர் பகுதியை பலப்படுத்தும் தன்மை உடையது நெய்.குடலில் சுரக்கக் கூடிய அமிலங்களையும் கட்டுக்குள் வைக்கிறது.

பாக்டீரியா:

இந்த பெயரைக் கேட்டாலே... நாம் ஏதோ வேறு கிரகத்திலிருந்து வந்து நம்மை தாக்கும் ஒரு உயிரினமாக நினைக்கின்றோம். பாக்டீரியா என்றாலே நோய் பரப்பும் என்ற எண்ணமே நமக்கு வரும். ஆனால் உடலில் நல்லது செய்யும் லட்சக்கணக்கான பாக்டீரியாக்கள் உள்ளன என்பது பலருக்கும் தெரியாது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறனும் பாக்டீரியாவுக்கு உண்டு.

ஜீரண சக்தியை மேம்படுத்தவும், உடல் இயக்கம் இயல்பாக இருக்கவும் உதவும் ஈஸ்ட் கலந்த உணவுப் பொருட்களான தயிர் போன்றவற்றில் நல்ல பாக்டீரியாக்களின் பங்கு தான் அதிகம்.

கோப்பி:(Coffee)

உலகம் முழுக்க அனைவரும் பருகுவது கோப்பியை... என்றாலும் அளவுக்கு அதிகமாகும்போது உடலுக்கு கேடு விளைவிக்கும். இதில் உள்ள காபின் என்ற மூலப் பொருளே உடலை பாதிக்கும். ஆனால் அளவோடு கோப் பியை பருகினால் நீரழிவு நோய் ஓரளவு கட்டுப்படும். குறிப்பாக பெண்களுக்கு காபின் நல்லது. தினமும் 3, 4 கப் கோப்பி பருகுவதால் நினைவாற்றல் அதிகரிக்கும். தசைகளில் ஏற்படும் வலிகளை கட்டுப்படுத்தும் சக்தி கோப்பிக்கு உண்டு. குடலில் ஏற்படும் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றலும் கோப்பிக்கு உண்டு.
நன்றி-mangayarkesari

Wednesday, June 10, 2009

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்!


உணவில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று வெந்தயம். உணவுக்கு ருசியைக் கொடுப்பதோடு, அதில் உள்ள பல்வேறு மருத்துவக் குணங்கள் நம்மை நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது.

எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ள வெந்தயத்தின் சிறப்புகளையும், வெந்தயத்தால் குணமாகும் நோய்களையும் பார்ப்போம்.

இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்து, 200 மி.லி. அளவு தண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும்.

காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின் தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள். பின் வெந்தயத் தண்ணீரை குடியுங்கள். தேவைப்பட்டால் கூடுதலாக குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம்.

வாரம் ஒருமுறை இதுபோன்ற வெந்தயத் தண்ணீர் குடித்து வர, உடல் சூடு, மலச்சிக்கல் என எந்த நோயும் உங்களை அண்டவே அண்டாது.

தவிர, உடலை வனப்புடன் வைப்பதில் வெந்தயத்தின் பங்கு அலாதியானது எனலாம். ஒரு தேக்கரண்டியளவு வெந்தயத்தை எடுத்துக் கொண்டு, வாணலியில் போட்டு வறுத்து, ஆற வைத்த பின் மிக்ஸியில் பொடி செய்து கொள்ளுங்கள். வெந்தயப் பொடியை ஆறிய பின் பாட்டிலில் போட்டு தேவைப்படும் போது தண்ணீரிலோ/மோரிலோ கலந்து பயன்படுத்தலாம்.

வெந்தயத்துடன், சிறிதளவு பெருங்காயத்தையும் போட்டு வறுத்து பொடி செய்த பின் ஒரு டம்ளர் வெந்நீரிலோ அல்லது மோரிலோ போட்டு பருகி வர வயிற்றுக் கோளாறுகள், அஜீரணம் போன்றவை ஏற்படாது.

மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இந்த பொடியை தண்ணீர்/மோரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும். வெறும் வயிற்றில் இதனைக் குடிக்க வேண்டும்.

வெந்தயத்தை நன்றாக வறுத்து பொடிசெய்து காபி பொடியுடன் கலந்து காபி போட்டு் குடித்தால், சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

வயிற்றுப்போக்கு ஏற்படும் பட்சத்தில், வெந்தயம் - பெருங்காயப் பொடியை ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை என 3 முறை குடிக்க வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்தப்படும்.

மூட்டுவலிக்கு வெந்தயத் தண்ணீர் மிகவும் அருமருந்தாகும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் மூட்டு வலி ஏற்பட்டால், வெந்தயப் பொடியை சிறிய வெல்ல கட்டியுடன் கலந்து சிறு உருண்டையாக்கி தினமும் 3 முறை சாப்பிட மூட்டு வலி குறையும்.

எந்த வகை ஊறுகாயாக இருந்தாலும், வெந்தயப் பொடியையும், பெருங்காயப் பொடியையும் சேர்க்க, சுவை கூடுவதுடன், உடல் உபாதைகளையும் போக்கும்.

இட்லி அரிசியுடன் உளுந்துக்குப் பதில், வெந்தயம் சேர்த்து அரைத்து சிறிது நேரம் ஊறிய பின் தோசையாக ஊற்றி சாப்பிட்டால், சுவை கூடுவதுடன் உடலுக்கும் ஏற்றதாக அமையும்.

மோரில் ஊற வைத்த வெந்தயத்தை தினமும் காலையில் சாப்பிட்டால், நீரிழிவு, வயிற்றுப்புண், வாய் துர்நாற்றம் உட்பட பல நோய்கள் குணமாகும்.

வெந்தயக் களி உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. கோடை காலத்தில் உடல் சூட்டில் இருந்து தப்பிக்க வாரம் ஒருமுறை வெந்தயக் களி செய்து சாப்பிடலாம்.

ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யவும் வெந்தயம் பயன்படுகிறது. பிரசவமான பெண்களுக்கு கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்.

நன்றி-Webdunia

Monday, June 8, 2009

மாதுளையின் மகத்துவம்


மாதுளம் பழச்சாறு அருந்தினால், அஜீரணக் கோளாறுகள் நீங்கி, நன்கு பசி ருசி உண்டாகும்.
சளித்தொல்லையால் அவதிப்படுபவர்கள், மாதுளஞ்சாறுடன் சிறிது மிளகுத்தூள் சேர்த்து குடித்து வர, சளித்தொல்லை முற்றிலும் குணமாகும்.
அடிக்கடி மாதுளம்பழச்சாறு குடித்துவர மேனியை நன்கு பளபளப்பாக வைக்கும். சருமநோய்கள் வராது காக்கும்.
இச்சாறுடன், எலுமிச்சை சாறு, தேன் கலந்து பருகினால் பித்தம் மொத்தமாக விலகும். கோடையில் ஏற்படும் நாவறட்சி, அதிக தாகம் தணிய மாதுளம் பழச்சாறு குடிக்கவும். உடலுக்கு நன்கு குளிர்ச்சியையும் ஏற்படுத்தும். மாதுளம் பழத்துடன், ஊறவைத்த வெந்தயத்தைச் சேர்த்து, மென்று தின்றால், குடல் கோளாறுகள் குணமாகும்.
இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள், மாதுளஞ்சாறு பருகி வர, இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.
மாதுளம் பழச்சாறு குடித்து, ஒரு செவ்வாழைப் பழம் தின்று வர, ஆண் மலட்டுத்தன்மை நீங்கும். விந்து உற்பத்தியையும், மொபிலிட்டியையும் அதிகரிக்கச் செய்யும்.
மாதுளைச் சாறுடன், வெங்காயச்சாறு, தேன் கலந்து குடித்துவர, சீதபேதி குணமாகும்.
மாதுளம் பழச்சாறுடன் சிறுது சீரகப் பொடியைச் சேர்த்து, தினம் இருவேளை சாப்பிட்டு வர, கல்லீரல் கோளாறுகள் நீங்கி நலன் பயக்கும்.
திராட்சை சாறுடன், மாதுளம் பழச்சாறு சம அளவில் கலந்து குடித்து வர, இரத்த சோகை நோய் குணமாகி, இரத்த விருத்தி ஏற்படும்.
தசைகளை நன்கு இயங்கச் செய்யும் தன்மை, மாதுளம் பழத்திற்கு உண்டு என சித்தர்கள் கூறியுள்ளார்கள்.
மாதுளம் பழத்தோலையும், நெல்பொரி, வெல்லம் இவைகளையும் சேர்த்து கஷாயம் செய்து பருகி வர, குண்டுடம்பு மெலிந்து, உடல்வாகு நடுநிலை அடையும். இது பக்கவிளைவில்லா இயற்கை மருந்தாகும்.
மாதுளம்பழ முத்துக்களை நன்கு மென்று தின்றால் விக்கல், வாந்தி விலகும்.
நெஞ்செரிச்சல், காதடைப்பு இவைகளை குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது மாதுளம் பழம்.
மாதுளை முத்துக்களை, விதையோடு நன்கு மென்று தின்றால், மலச்சிக்கலைப் போக்கும்.
மலத்துடன், இரத்தம் கசிவதை குணப்படுத்தும் தன்மை மாதுளஞ்சாற்றுக்கு உண்டு.
மாதுளஞ்சாறு பருகி வர, முதியோர்க்கு நினைவாற்றல் அதிகரிக்கும்.
மாதுளஞ்சாறுடன் ஆப்பிள்சாறு சேர்த்துப் பருகினால், மன இறுக்கம் குறையும்.
சிறுநீர் பிரியாமல் அவதிப்படுபவர்கள், மாதுளம்பழச்சாறு குடித்துவர, சிறுநீர் நன்கு பிரியும்.

Saturday, November 15, 2008

சிறுநீரக பாதிப்பைத் தவிர்க்க...

இந்தியாவில் சுமார் ஒரு லட்சம் பேர் சிறுநீரக பாதிப்பால் அவதிப்படுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

சிறுநீரக நோய்க்கு உயர் இரத்த அழுத்தமே மிக முக்கியக் காரணமாக அமைகிறது. சிறுநீரக பாதிப்புக்கு ஆளாகும் நோயாளிகளில் 27 விழுக்காட்டினர் உயர் இரத்த அழுத்தத்தினாலேயே பாதிக்கப்பட்டிருப்பது அந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் சிறுநீரகங்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. அந்த வகையில் எந்தவொரு சிறுநீரகம் தொடர்பான பாதிப்பானாலும், அது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். உயர் இரத்த அழுத்தமானது இரத்த நாளங்களை பாதிக்கச் செய்து, அவற்றை குறுகியதாக்குவதுடன், நாளங்களின் வளைந்து கொடுக்கும் தன்மையை குறைத்து விடும்.

உயர் இரத்த அழுத்தத்தால், சிறுநீரகங்களில் உள்ள இரத்த நாளங்களும் பாதிக்கப்படும். இதனால் இரத்தத்தில் உள்ள அசுத்த மற்றும் துர்கிருமிகளை அகற்றும் பணிகளை மேற்கொள்ளும் சிறுநீரகங்களின் செயல்பாட்டில் பாதிப்பு உருவாகும். முழு அளவில் இரத்தத்தை பரிசுத்தப்படுத்த முடியாத நிலை ஏற்படும். இதனால் உடலில் பல்வேறு நோய்கள் உட்பட பல பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

சிறுநீரக பாதிப்பால் இதய நோய், எலும்பு நோய் உள்ளிட்டவை ஏற்படும் வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன.

பெரும்பாலும் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டிருப்பது, மிகவும் தாமதமாகவே கண்டறியப் படுகிறது. உடலின் மற்ற உறுப்புகள் பாதிப்புக்குள்ளான பிறகே சிறுநீரகப் பாதிப்பு வெளிப்படையாகத் தெரிய வருகிறது.

இதற்குக் காரணம் சிறுநீரகங்கள் செயல்பாடு பாதியளவுக்கு பாதிக்கப்பட்டிருந்தாலும் கூட, பெரும்பாலானோருக்கு உடலில் எந்த அறிகுறிகளும் தெரிவதில்லை. சிறுநீரகங்கள் பாதிப்புக்குள்ளானோருக்கு டயாலிசிஸ் எனப்படும் இரத்த சுத்திகரிப்பு மட்டுமே தீர்வாக அமையும்.

சிறுநீரக பாதிப்புகளை தடுப்பது எப்படி?

மருத்துவப் பரிசோதனைகள் மூலம் சிறுநீரக நோய்களை உரிய நேரத்தில் கண்டறிந்தால், நோய் பாதிப்பில் இருந்து மீள முடியும். இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை மூலம் சிறுநீரகப் பாதிப்புகளை அறியலாம்.
சிறுநீரில் எந்தவித புரோட்டீன் இழப்பும் இருத்தல் கூடாது. அப்படி இருப்பது கண்டறியப்பட்டால், உடனடியாக சிறுநீரக நோய்க்கான மருத்துவர்களை அணுகலாம். சிறுநீரில் அல்புமின் போன்ற புரோட்டீன் சிறிய அளவில் வெளியேறினாலும் கூட சிறுநீரகப் பாதிப்பிற்கான அறிகுறியாகும்.

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். இதன்மூலம் சிறுநீரக பாதிப்பில் இருந்து விடுபட முடியும். உங்களின் இரத்த அழுத்தத்தை அவ்வப்போது சோதித்துப் பார்த்தல் அவசியம்.

அன்றாடம் உடற்பயிற்சி செய்தல், காய்கறிகள், பழங்கள் போன்ற நார்ச்சத்து அதிகம் கொண்ட உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்வதால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருப்பதுடன் சிறுநீரகப் பாதிப்பில் இருந்தும் தப்பலாம்.

குறிப்பிட்ட இடைவெளியில் இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை செய்வதன் மூலம் ஏதேனும் பாதிப்புகள் இருப்பின் அது விரைவில் கண்டறியப்பட்டு விடும்.

நன்றி-Webdunia

சிறுநீரகக் கற்கள்

சிறுநீரகக் கற்கள்

சிறுநீரகக் கல் என்பது சிறிய படிகங்களை கொண்ட ஒரு திடப்பொருள் ஆகும். சிறுநீரகத்திலோ அல்லது சிறுநீரகக்குழாயிலோ ஒரே நேரத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கற்கள் இருக்கும்

காரணங்கள்
சில பொருட்களினால் சிறுநீர் அடர்கரைசலாகும் போது சிறுநீரகக் கற்கள் தோன்றலாம். சிறுநீரில் காணப்படும் இந்த பொருட்கள் சிறிய படிகங்களை உண்டாக்கி, அவை கற்க்களாக மாறலாம். சிறுநீர் கற்கள் உண்டாகி சிறுநீரகக் குழாய் வழியாக கீழே இறங்கும் வரை எந்த அறிகுறியையும் ஏற்படுத்தாது. சிறுநீரகக் கற்கள் சிறுநீர் குழாய் வழியாக கீழ்நோக்கி நகரும்போது வலியினை ஏற்படுத்தும். இவ்வலியானது, அடிக்கடி பின்புற விளாவின் இரண்டு பக்கங்களிலும் ஆரம்பித்து கீழ்நோக்கி நகரும்.

கற்களின் வகைகளாவன

  • கால்சியம் கற்கள் அதிகமாக ஏற்படக்கூடியவை, அவை இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமாக ஆண்களுக்கு ஏற்படும். சாதாரணமாக 20 வயது முதல் 30 வயதுடையவர்களுக்கு ஏற்படும். திரும்பத் திரும்பத் ஏற்படும் தன்மையுடையது. கால்சியம் பிற பொருட்களான ஆக்ஸலேட் (மிக அதிகளவிளான பொருள்), பாஸ்பேட் அல்லது கார்போனேட் போன்றவையுடன் சேர்ந்து கற்களை உண்டாக்கும்.
  • யூரிக் அமில கற்கள் - இவைகளும் அதிக அளவில் ஆண்களுக்கு ஏற்படும்.
  • ஸ்ட்ருவைட் கற்கலள்- (மெக்னீஸியம் அமோனியம்/ பாஸ்பேட் படிகங்களால் ஏற்படும் கல்) என்பது முக்கியமாக பெண்களில் சிறுநீர் குழாய் சம்பந்தமான தொற்று நோய் கண்டதினால் ஏற்படக்கூடியவை. அவை மிகப்பெரியதாக வளரக் கூடியவை. மேலும் சிறுநீரகங்கள், சிறுநீர்குழாய் அல்லது சிறுநீர் பையில் அடைப்பை ஏற்படுத்தக் கூடியவை.

அறிகுறிகள்

  • பின்பக்க விலாவில் வலி அல்லது முதுகுவலி, ஒரு பக்கம் அல்லது இரணடு பக்கத்திலும் அதிகரிக்கும் வலி
  • குமட்டல், வாந்தி
  • அடிக்கடி சிறுநீர் கழித்தல்
  • சிறுநீர் அளவு அதிகரித்தல்
  • சிறுநீரில் இரத்தம் காணப்படுதல்
  • அடிவயிற்றில் வலி
  • வலியோடு கூட சிறுநீர் கழித்தல்
  • இரவு நேரத்தில் அதிக அளவு சிறுநீர் கழித்தல்
  • ஆணின் முதன்மை இனப்பெருக்க உறுப்பில் (டெஸ்டிகல்) வலி
  • சிறுநீரின் நிறம் இயற்க்கைக்கு மாறாக காணப்படுதல்

எப்பொழுது மருத்துவ நிபுனரை அணுகலாம்?
சிறுநீர்கற்கள் இருப்பதற்கான அறிகுறிகளோ, சிறுநீரக கற்கள் திரும்பத்திரும்ப ஏற்படுவதற்கான அறிகுறிகளோ, சிறுநீர் கழிப்பது வலியுடன் கூடியதாக இருந்தாலோ, அனுதினம் வெளியேற்றப்பட்ட சிறுநீரின் அளவு குறைந்தாலோ, அல்லது பிற புதிய அறிகுறிகள் தோன்றினாலோ மருத்துவரை அணுகலாம்

தடுப்பு முறைகள்
சிறுநீரக கற்கள் இருப்பதற்கான சாத்தியங்கள் இருப்பின், அதிக அளவு தண்ணீர் உட்கொள்ளுதல் அவசியம். பொதுவாக ஒரு நாளைக்கு 6 முதல் 8 டம்ளர் தண்ணீர் குடிக்கச் செய்ய வேண்டும். சிறுநீரககற்களின் தன்மையை பொருத்து மருத்துவரின் ஆலோசனையின் படி, மருந்தோ அல்லது பிற முறைகளையோ கையாண்டு, கற்கள் திரும்பத் திரும்ப ஏற்ப்படுவதை தடுக்கலாம்.

நன்றி-IDNG

Wednesday, November 12, 2008

சிறுநீரகம்

பெருமளவு நீரைச் சேமிக்கும் சிறுநீரகம்

ஒன்றுக்கு போதல் என்றால் தமிழில் சிறுநீர் கழிக்கப்போதல் என்று அர்த்தம். அது இடக்கரடக்கல் என்று எப்பவோ தமிழாசான் படிப்பித்த ஞாபகம். ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை சிறுநீரகம் செய்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? கழிவுகளை அகற்றல், நீர்ச்சமநிலையை, உப்புகளின் சமநிலையை பேணல், எரித்திரோபொயிற்றீன் என்ற செங்குருதிசிறுதுணிக்கைகளின் உருவாக்கத்திற்கு தேவையான ஓமோன்களைச் சுரத்தல் என்று பல தொழில்களை ஒரேநேரத்தில் அது செய்கிறது .

சிறுநீரை உருவாக்குவது சிறுநீரகம். சிறுநீர் ஒரு கழிவுப்பொருள். அதில் யூரியா, மேலதிக உப்புகள், கிரியற்றினின், நீங்கள் உட்கொண்ட சில மருந்துகள் என்பன நீரில் கரைந்த நிலையில் காணப்படும். இந்த சிறுநீர் உருவாக்கம் சிறுநீரகத்தியில் உள்ள கலன்கோளத்தில் இரத்தம் வடிக்கப்படும் செயன்முறையுடன் ஆரம்பிக்கும். இப்படி வடிக்கபபட்ட கலன்கோள வடிதிரவத்திலிருந்து குளுக்கோசு போன்ற மூலக்கூறுகள் முற்றாக உறிஞ்சப்படும். முக்கியமாக நீர் மீள அகத்துறிஞ்சப்படும். இவ்வாறு அகத்துறிஞசப்படாதுவிட்டால் ஒவ்வொருநாளும் பரல்கணக்கில் நாம் சிறுநீர் கழிக்க வேண்டிஏற்படும்.

கிட்னி சட்னியாகிவிட்டது என்ற வசனத்தை சினிமாவில் நீங்கள் கேட்டிருக்கலாம். உண்மையில் சிறுநீரகம் திடீரென தொழிற்பட மறுக்கும்போது சிறுநீர் உற்பத்தியாவது திடீரெனத் தடைப்படும். இதனை acute renal failure என்று சொல்வார்கள். இதேபோல சிறுநீரகம் கொஞ்சம் கொஞ்சமாகப் பழுதடைந்து செல்லுதல் chronic renal failure எனப்படும். அவ்வாறு சிறுநீரகம் பழுதடைய நீரிழிவு (Diabetes) உயர்குருதியமுக்கம் (Hypertension) போன்ற நோய்கள் காரணமாக அமைகின்றன. சிறுநீரகம் குறித்த நிலைக்குமேல் தொழிற்பட முடியாமல் போனால் சிறுநீரகத்தை மாற்றீடு (Renal replacement therapy) செய்ய வேண்டும். இது குருதிச் சுத்திகரிப்பாக (Dialysis) அல்லது சிறுநீரக மாற்று சிகிற்கையாக (Renal transplant) அமையலாம்.

சிறுநீரகம் என்றவுடன் பலருக்கு ஞாபகம் வருவது சிறுநீரக கல்தான். சிறுநீரில் வெளியேற்றப்படும் ஒட்சலேற்று பொசுபேற்று போன்ற உப்புக்கள் சேர்ந்து உருவாவது தான் இந்த கல். இது மண்போன்று சிறிய அளவில் இருக்கும்போது ஒரு பிரச்சனையுமில்லாமல் சிறுநீருடன் வெளியேறிவிடக் கூடும். பெரிய கற்கள் சிறுநீர்க் குழாய்களில் தடையை ஏற்படுத்துவதுடன் தாங்க முடியாத வேதனையையும் தரக்கூடும். நோவைப் பொறுத்தவரை மகப்பேற்று வேதனைக்கு அடுத்தபடியான கடுமையான வேதனை சிறுநீரக கல் தரும் வேதனை தான். தண்ணீர் குடிக்காமல் நீண்டநேரம் இருப்பவர்களுக்கு இவ்வகையான கற்கள் உருவாகலாம் என நீங்கள் அறிந்திருப்பீர்கள். தண்ணீர் பருகாமல் இருக்கும்போது நீரை இயன்ற மட்டும் சேமிப்பதற்காக சிறுநீர் செறிவாக்கப்படும். இதனால் கற்கள் உருவாகும் சாத்தியம் அதிகம். இது பழைய விடயம். புதிய விடயம் உன்ன தெரியுமா? மிகமிக அதிகமாக (ஏறத்தாழ 6-10 லீற்றர் நீரை ஒருநாளில்) பருகுபவர்களுக்கும் கல் ஏற்படும் வாய்ப்பு அதிகமாம். சிறுநீரகத்தில் உப்புக்கள் சேர்ந்து கல் உருவாகாமல் தடுக்க ஒருவகை புரத மூலக்கூறுகள் சுரக்கப்படுகின்றன. அதிகமான சிறுநீர் உருவாகும்போது இவை ஐதாக்கப்பட்டு விடுவதால் கல் தோன்றும் வாய்ப்பு அதிகமாம். எங்களுக்கென்ன, நாங்கள் எல்லாவற்றையுமே அளவோடு செய்பவர்கள் என்கிறீர்களா? என்றாலும் சிறுநீரக விடயத்தில் ஒரு கண் வைத்திருங்கள்.

Wednesday, November 5, 2008

சர்க்கரை நோயாளிகள் கடைபிடிக்க வேண்டியவை

டயாபடிஸ் (Diabetes) அல்லது சர்க்கரை நோய் என்பது பற்றி பெரும்பாலானோர் அறிந்திருப்போம்.

பொதுவாக `வருமுன் காக்க' என்ற வாக்கின்படி, எந்தவொரு நோயும் வருவதற்கு முன் தற்காப்பாக இருந்து கொள்வதே சிறந்தது. ஒருவேளை நோய் வந்து விட்டது என்பதை அறிந்து கொண்டால், பதற்றப்படாமல், அதற்குரிய சிகிச்சையை சம்பந்தப்பட்ட சிறப்பு மருத்துவரை அணுகி எடுத்துக் கொள்ள வேண்டும்.

சர்க்கரை நோயும் அதேபோலத்தான். வீட்டில் தாய்-தந்தைக்கோ அல்லது மூதாதயர்களுக்கோ சர்க்கரை நோய் இருப்பின், அடுத்த சந்ததியினருக்கும் சர்க்கரை நோய் வரும் என்பது நியதி என்றாலும், அதற்காக அச்சப்பட வேண்டியதில்லை.

ஒரு வீட்டில் தந்தைக்கு சர்க்கரை நோய் இருந்து, அவரின் 2 மகன்களில் ஒருவருக்கு அதே பாதிப்பு இருக்கக்கூடும். அல்லது 2 பேருக்குமே சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகளும் உண்டு.

குறிப்பிட்ட வயதிலிருந்தே அதாவது, 20 வயது வாலிபப் பருவம் முதலே உரிய உணவுக் கட்டுப்பாட்டுடன் உடற்பயிற்சியும் செய்து வந்தால், சர்க்கரை நோய் வருவதில் இருந்து தப்பிக்கலாம்.

அதாவது கட்டுப்பாடின்றி இருப்பவர்களுக்கு 40 - 45 வயதில் சர்க்கரை நோய் உறுதிப்படுத்தப்பட்டால், முறையான உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடிப்போருக்கு அதனை சுமார் 55 வயது வரையிலும் தள்ளிப்போடலாம். எனவே பரம்பரை சர்க்கரை வியாதியைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை.

இன்றைய கால கட்டத்தில் சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. உடல் உழைப்பு இல்லாமையே முழுமுதற் காரணம் என்றால் மிகையில்லை.

பல மணி நேரம் இருக்கையில் அமர்ந்த நிலையிலேயே பணியாற்றுவது, கணினி முன் அமர்ந்து ஏதாவது எண்ணெயில் வறுத்த சிப்ஸ் போன்றவற்றை சாப்பிட்டுக் கொண்டே வேலை செய்தல், அதிகப்படியான உடல் உழைப்பு இல்லாத வேலைகளைச் செய்தல் போன்றவற்றால் மிகக் குறைந்த வயதிலேயே சர்க்கரை நோய் ஏற்படுகிறது.

பரம்பரையாக தந்தை, தாய்க்கு சர்க்கரை நோய் இருந்து அடுத்த தலைமுறையினருக்கு சர்க்கரை நோய் வருவதில் ஆச்சர்யமில்லை.

ஆனால், பரபரப்பான உலகில் ஒரு சில குழந்தைகளுக்கும் கூட சர்க்கரை நோய் வந்திருப்பது ஆச்சரியமளிக்கிறது.
சிலருக்கு சிறு வயதிலேயே அதாவது 20-25 வயதிற்கெல்லாம் டயாபடிஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு விடும். எனவே சர்க்கரை நோய்க்கும், வயதுக்கும் சம்பந்தமில்லை.

சர்க்கரை நோயாளியான பின் என்ன சாப்பிடலாம்? எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதே முக்கியம்.

சர்க்கரை நோய் என்பது உறுதிப்படுத்தப்பட்டவுடனேயே தினமும் `வாக்கிங்' செல்வதை வழக்கப்படுத்த வேண்டும். கூடுமானவரை அதிகாலையில் நடப்பது உடலுக்கும், மனதிற்கும் ஏற்றது. உடலில் சேரும் தேவையற்ற கொழுப்பானது சக்தியாக எரியப்பட்டு, புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது.

சர்க்கரை நோயால் உருவாகக்கூடிய பின் விளைவுகளைத் தவிர்க்க `வாக்கிங்' மிகவும் அவசியமான ஒன்றாகிறது.

பொதுவாக வாழைப்பழங்கள் அஜீரணத்தை குறைத்து உடலின் கழிவுகள் வெளியேற வழிவகுக்கும். ஆனால் சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழங்களை அறவே தவிர்ப்பது நல்லது. என்றாலும் டாக்டரின் பரிந்துரைப்படி தேவைப்பட்டால் வாழைப்பழங்களை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம்.

பழங்களைப் பொறுத்தவரை கொய்யாப்பழம், பேரிக்காய் ஆகியவை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட ஏற்றவை.

அரிசி சோறு 3 வேளையும் உண்பதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். மதியம் ஒருவேளை குறைவான அளவு அரிசி சோற்றுடன் அதிகளவில் காய்கறிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். காய்கறிகளும் பொறித்தவற்றை விடவும் வேகவைத்ததாக இருத்தல் சிறந்தது.

மற்ற இருவேளைகளிலும் சப்பாத்தி போன்ற கோதுமையினால் தயாரித்த உணவோ அல்லது கேழ்வரகு கஞ்சி போன்றவையோ சாப்பிடுதல் அவசியம். இதே போன்ற கட்டுப்பாடான, மருத்துவர்கள் பரிந்துரைத்த உணவு முறையைக் கடைபிடித்து அவ்வப்போது உரிய பரிசோதனைகளையும் செய்து வரும் சர்க்கரை நோயாளிகள் வேறு எந்த விளைவுகளைப் பற்றியும் கவலை கொள்ளத் தேவையில்லை.